‘தாய் கிழவி’ ப்ரீ-ரிலீஸ்: ராதிகாவின் மிரட்டல் நடிப்பும், சிவகார்த்திகேயனின் எமோஷனல் பேச்சும்!

‘தாய் கிழவி’ ப்ரீ-ரிலீஸ்: ராதிகாவின் மிரட்டல் நடிப்பும், சிவகார்த்திகேயனின் எமோஷனல் பேச்சும்!

பாஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

“பெண் எம்.ஆர். ராதாவாக நடித்திருக்கிறேன்” – ராதிகா நெகிழ்ச்சி

நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா, “சுமார் 48 ஆண்டுகால எனது சினிமா பயணத்தில் இந்தப் படம் ஒரு முக்கியமான மைல்கல். இதில் நான் மேக்கப் போட்டுக்கொண்டு நடிப்பதற்கு கமல்ஹாசன்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். திரையில் ராதிகா தெரியாமல் அந்த ‘தாய் கிழவி’ கதாபாத்திரம் மட்டுமே தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னை ஆரம்ப காலத்தில் அவமானப்படுத்தியவர்களுக்கு, நான் ‘எம்.ஆர். ராதாவின் மகள்’ என்பதை இந்த நடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறேன். உண்மையில் இது ரஜினிகாந்த் சார் நடிக்க வேண்டிய கதை, ஆனால் ஒரு பெண்ணை மையப்படுத்தி இயக்குநர் மாற்றிய விதம் அருமை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

“யாரும் தடுக்க முடியாது” – சிவகார்த்திகேயன் அதிரடி

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நல்ல கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ். ‘தாய் கிழவி’ படத்தின் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. சினிமாவில் நான் வளரும்போது பல தடைகள் போடப்படுகின்றன, ஆனால் அதையெல்லாம் தாண்டி வர நான் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்த கமல்ஹாசன் சார், இதில் பல புதிய நட்சத்திரங்களை உருவாக்கியுள்ளதாகப் பாராட்டினார். தொடர்ந்து தரமான படங்களைத் தயாரிப்பதே எனது லட்சியம்” என்று தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

சரத்குமார் மற்றும் திரையுலகினரின் வாழ்த்து

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார், “தாய் கிழவி என்றால் ஊர்ப்பக்கத்தில் அனைவரையும் அரவணைப்பவர் என்று பொருள். அந்தப் பெயருக்கு ராதிகா கச்சிதமாகப் பொருந்துகிறார். அவர் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல” என்று வாழ்த்தினார். மேலும், நடிகர் சூரி, பாலசரவணன், இளவரசு மற்றும் பல இயக்குநர்கள் கலந்துகொண்டு, இந்தப் படம் தேசிய விருதுகளைக் குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். பெண்களின் வலிமையையும், கிராமத்து வாழ்வியலையும் பேசும் ‘தாய் கிழவி’, திரையரங்குகளில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்தனர்.

error: Content is protected !!