‘கேங்கர்ஸ்’ – விமர்சனம்!

‘கேங்கர்ஸ்’ – விமர்சனம்!

சுந்தரவேல் சிதம்பரம் ஆகிய சுந்தர்.சி என்னும் கோலிவுட் டைரக்டர். மிக எளிதான படைப்புகளால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர். இவரின் படங்களுக்கான அதிகமான பார்வையாளர்கள் யாரென்று பார்த்தால் குழந்தைகளும், குடும்பங்களும் தான். அதனால் அவர்கள் ரசிக்கும்படி தான் காட்சிகள் வைப்பார். எல்லை மீறிய ஆபாசமான காட்சிகள், இவர் படங்களில் இருக்காது. இரட்டை அர்த்த வசனங்களை இவர் தன் படங்களில் வைப்பதில்லை. ஒருவேளை அப்படி ஒரு வசனம் இருந்தால் அது பார்ப்பவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். அதே போல ஆபாச பாடல் வரிகள் இருக்காது. சுந்தர் சி படங்களில் நாயகி(கள்) படுகிளாமரராகத்தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் ஆபாசமாக இருக்க மாட்டார்கள். அப்பேர்ப்பட்ட சுந்தர் சியின் கைவண்ணத்தில் ரிலீஸான அரண்மனை 4 மற்றும் மதகஜராஜா ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது. அதே உற்சாகத்தில் வெள்ளித்திரையில் கொஞ்சம் ஃபேட் அவுட் ஆகி விட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ள வைகைபுயல் வடிவேலுவை மீண்டும் சிரிப்பானந்தா-வராக்கி பார்க்கும் நோக்கில் வழங்கி இருப்பதே கேங்கர்ஸ் படம்.

அதாவது அரசன்கோட்டை என்னும் ஊரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி. அப்பள்ளி மாணவி திடீரென காணாமல் போகிறார்.அவரைத் தேடித் தரச் சொல்லி, முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் சுஜிதா (கேத்ரின் தெரசா) புகாரளிக்கிறார்.அதோடு, அவ்வூரில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களைச் செய்யும் மலையரசன் (மைம் கோபி) மற்றும் அவரது தம்பி கோட்டையரசன் (அருள்தாஸ்) குறித்தும் புகாரளிக்கிறார்.அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை அனுப்புகிறது. இதனிடையே, பி.டி.வாத்தியாக அதே அரசன்பட்டி பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் கோஷ்டியை போட்டு புரட்ட, அவர் தான் அந்த ரகசிய காவல்துறை அதிகாரி என்று கேத்ரின் நினைக்கிறார். ஆனால், சுந்தர்.சி போலீஸ் இல்லை, என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர்.சி யார்?, அவர் எதற்காக வில்லன் கோஷ்டியை வதம் செய்கிறார்? என்பதை தொடக்கத்தில் கொஞ்சம் சலிப்பும் பின்னர் நிறைய சிரிப்புக் கலந்து சொல்வதுதான் கேங்கர்ஸ் படக் கதை.

நாயகனாக வரும் சுந்தர்.சி, டைரக்டராவும் இருப்பதால் தனக்கு கை வந்த நடிப்புக் கலையை மட்டும் சரியாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்து விடுகிறார்.தன்னை விட , தான் சொல்லப் போகும் கதையை விட அரங்க்கில் வெடிச் சிரிப்பு நிக்ழ்ச்சி நடத்துவதுதே நோக்கம் என்பதை வெளிப்படையாக்கி துணைக்கு வடிவேலுவுடன் கைக் கோர்த்து செய்யும் அலப்பறை பர்ஃபெக்டாக ஒர்க் அவுட் ஆகிறது. அதிலும் நிஜ நாயகன் வைகைப்புயல் வடிவேலு காமெடிகளை நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பாக கொடுத்து பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி விடுவதில் ஜெயித்து விடுகிரார் . படம் ஆரம்பித்து சிறிது நேரம் கொஞ்சம் தொய்வான காமெடி காட்சிகள் மூலம் மெதுவாக நகரும்படியான திரைக்கதை அமைப்பில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் போக போக வேகம் எடுத்து தனது ட்ரேட் மார்க் நகைச்சுவை காட்சிகள் மூலம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க செய்து தியேட்டர்களில் விசில்களையும் கைதட்டல்களையும் பறக்க விட்டிருக்கிறார்.குறிப்பாக வைகைப்புயல் அடுத்தடுத்து பல கெட் அப்களில் காமெடி கதகளி ஆடும் சீங்கள், அதாவது ‘டெலக்ஸா’ காமெடி, அதற்குள் வரும் ‘சின்னத் தம்பி’ ரெஃபரன்ஸ், ’12ரூ ஜூஸ்’ காமெடி, பம்பாய் லாக்கர் கம்பெனி ‘சார்லஸாக’ வடிவேலு செய்யும் அலப்பறைகள் – கொடுத்த காசு செத்துடுச்சு என்று சொல்ல வைத்து விடுகிறது.

கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படும் நாயகியின் வழக்கத்தை உடைத்து கேதரீன் தெரசாவுக்கு வெயிட்டான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பது தனிக் கவனம் பெறுகிறது. வில்லன் கேங்கில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும் ஹீரோ கேங்கில் இருக்கும் பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு அனைவரும் ஒன்று சேர்ந்து காமெடி கேங்கர்ஸாக பார்வையாளர்களை படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.

மியூசிக் டைரக்டர் சத்யாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கமர்ஷியல் அம்சங்கள் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனாலும் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்காதது ஏமாற்றமே.கேமராமேன் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைப்பத்தில் ஜெயித்து விடுகிறார். எடிட்டர் பிரவீன் ஆண்டனி, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

திரைக்கதை மற்றும் வசனம் காமெடி காட்சிகளுக்கான சத்துகளை வழங்கிய வெங்கட் ராகவனின் பங்களிப்பு பெரும்பலமாக அமைந்திருப்பதோடு, போதிய சுவையான திருப்பங்கள் மூலம் படத்தை ரசிக்க வைப்பதில் ஜெயித்து விடுகிறார்கள்.

வழக்கம் போல் சில லாஜிக் மீறல்கள், ஒட்டாத காட்சிகள் என இருந்தாலும் இரண்டரை மணி நேர படத்தை காமெடியுடன் ஸ்பீடாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்று பொழுது போக்கு டைரக்டர் என்ற அந்தஸ்தை தக்க வைத்து விடுகிறார் சுந்தர் சி.

மார்க் 3.5/5

error: Content is protected !!