மயோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழக அரசு உத்தரவு! -ஏன்?

மயோனைஸுக்கு ஓராண்டு தடை:  தமிழக அரசு உத்தரவு! -ஏன்?

மயோனைஸ்.. இந்த பெயர் இன்று அனைவருக்கும் பரிச்சயமானது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த உணவகத்திற்கும் சென்று மிருதுவான உணவை ஆர்டர் செய்தாலும், “கொஞ்சம் எக்ஸ்ட்ரா மயோனைஸ்” என்று காட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.இது வெள்ளை நிறத்தில் ஐஸ்கிரீம் போல் இருக்கும். மேலும், இந்த மயோனைஸ் முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், உப்பு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, தயார் செய்யப்படும் கலவையாகும்.துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடுபவர்கள் மயோனைஸ் பற்றி சொல்லி தெரிய தேவையில்லை. இப்படி எல்ல உணவுடனும் மயோனைஸ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குறிப்பாக பாஸ்ட் புட், மட்டன், சிக்கன், சவர்மா, பிரெட் ஆம்லெட் என்று பல உணவு வகைகளுக்கு மயோனைஸ் சேர்க்கப்படுகிறது. எடுத்துக் கொள்ளும் மெயின் டிஸ்-ஐ தொட்டுக் கொள்ளும் சைடிஸ் ஆகவே மயோனைஸ் இருக்கிறது.

இந்நிலையில் பச்சை முட்டையிலிருந்து செய்யப்படும் மயோனைஸை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்யவும் ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.அந்த வகையில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 30(2) (a) படி, பொது சுகாதார நலன் கருதி ஏப்ரல் 8ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு தமிழ்நாடு முழுவதும், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனஸை உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அல்லது விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2023ஆம் ஆண்டு முட்டையிலிருந்து மயோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு கேரளா மாநில அரசு தடை செய்தது. அந்த வகையில், முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தடை விதித்த முதல் இந்திய மாநிலம் கேரளா. தற்போது, கேரளா, தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து, இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயோனைஸ் தயாரிப்பில் பச்சை முட்டைகளைப் பயன்படுத்துவதால் சால்மோனெல்லா போன்ற நோய்க்கிருமிகளால் மாசுபடும் அபாயம் அதிகமாக உள்ளதால், உணவு விஷமாக மாறவும் வழிவகுக்கும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இது சமைக்கப்படாத பொருளாக இருப்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும் என உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அல்வால் என்ற பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தரமற்ற மயோனைஸ் சாப்பிட்ட இளைஞர்கள் சிலர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மேற்கொண்ட ரத்தப் பரிசோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனல்லா பாக்டீரியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த வகையில், கடந்த ஆண்டு தெலங்கானா அரசு மயோனைஸை தடை செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது.மேலும், ஹைதராபாத்தில் வசித்து வந்த ரேஷ்மா பேகம் (33) என்பவர் சாலையோரக் கடையில் சாப்பிட்ட உணவால், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், மயோனைஸுடன் மோமோஸ் சேர்த்து சாப்பிட்டதாகக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் உயிரிழந்த நிலையில், கடைக்காரர் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரையுடன் அங்கு மயோனைஸ் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!