ரெட்ரோ – விமர்சனம்!

ஒலி மற்றும் பேச்சு என்னும் மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு என்கிறார்கள்! அகில உலகத்துக்கும் பொதுவான மொழி அது. பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. ஆனால் கைக்குழந்தையாக இருந்தபோது ஒரு நாளைக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்ததும் ஒரு நாளைக்கு 15-20 முறைதான் சிரிக்கிறோம். மகிழ்ச்சியை மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருவது சிரிப்பு…! அந்த சிரிப்பு என்பதே வராத ஜெனடிக் ரோலில் சூர்யாவை வைத்து செஞ்சு இருக்கார் லக் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். ஆம்., இந்த ரெட்ரோ படம் முதல்நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17.75 கோடி வசூல் செய்துள்ளதாக தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வசூலானது திரையரங்குகளில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் வசூலிக்கப்பட்டது என்றும், இது நடிகர் சூர்யாவின் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நினைவு தெரிந்த நாளில் இருந்து சிரிப்பென்றால் என்னவென்றே தெரியாதவர் சூர்யா. அதற்கு காரணம், பால்ய வயதிலேயே அம்மா என்று நம்பிக் கொண்டிருந்த சுவாசிகா தன் இறுதிகாலக் கட்டத்தில், “நீ எனக்குப் பிறந்தவன் இல்லையாக்கும்..!” என்பதை மட்டும் சொல்லிவிட்டு மரணம் அடைந்து விடுகிறார், போதாக்குறைக்கு அவரது வளர்ப்பு தந்தையான ஜோஜு ஜார்ஜும் ஒரு சூழலில் கர்ண கடூரமான குரலில் “நீ என் பிள்ளை இல்லை..!” என்றே சொல்லி வளர்க்கிறார்.அதே சமயம் தாதாவாக இருக்கும் அவர் மகனையும் தன் அடாவடி வேலைகளுக்கே அடியாளாகப் பயன்படுத்துகிறார்.இது போன்றக் காரணங்கள் மட்டுமல்லாமல் சூர்யாவின் ஃப்ளாஷ் பேக் தெரியும் போதும் அவருக்கு சிரிப்பு வராத ஜெனடிக் காரணம் ஒன்றும் தெரிகிறது.இச்சூழலில் இவருக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்து அது திருமணம் வரை சென்று விடுகிறது. பூஜா ஹெக்டேவிற்கோ சூர்யாவின் ரவுடிசம் பிடிக்கவில்லை. ரவுடிசத்தையும் விட்டு விட்டால் தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என சூர்யாவை வற்புறுத்துகிறார். பூஜாவுக்காக சகல கெட்ட சகவாசங்க்களையும் துறந்து திருமணம் செய்யும் நேரத்தில் சூர்யாவை மீண்டும் அடிதடியில் இறக்கி விடுகிறார் அவரது நயினா ஜோஜு ஜார்ஜ். அதனாலெ வெகுண்டெழுந்து வளர்ப்பு அப்பா கையை வெட்டி ஜெயிலுக்கு போக நேர்கிறது. இதை தாங்கி கொள்ள முடியாமல் அவரை பூஜா பிரிந்து விட்டு அந்தமானுக்கு சென்று விடுகிறார். அப்படி பிரிந்த சூர்யா பூஜா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? சூர்யா சிரிக்காமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?என்பதே ரெட்ரோ படத்தின் கதை.
நாயகன் சூர்யா பாரிவேல் கண்ணனாக வந்து கவர்வதில் ஜெயித்து விடுகிறார். பெற்ற அப்பா இல்லை என்று தெரிந்த பின்னரும் அவருக்காக சகல சட்டமீறல் காரியங்க்களையும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் அரக்கனாகி, பிறகு ஒரு இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளி, என ஒரே கேரக்டருக்கு பல முகங்கள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.குறிப்பாக முதல் பாதி வரை சிரிப்பே இல்லாமல் நடிப்பது, இறுக்கமான முகத்துடன் காதல் காட்சிகளில் நடிப்பதெல்லாம் பலே . ஹீரோயின் பூஜா ஹெக்டே அமைதியான பெண்ணாக வந்து கவர்கிறார். இவரது மெச்சூரிட்டியான நடிப்பு ஏற்றுள்ள ரோலுக்கு உரிய வலு சேர்த்து இருக்கிறது. குறிப்பாக இவருக்கும் சூர்யாவுக்கும் ஆனா லவ் கெமிஸ்ட்ரி வேற லெவல். அதுவே படத்துக்கு உயிராக அமைந்து பார்ப்பவர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவி இருக்கிறது. ஆனால் சொந்த குரல் டப்பிங் ஒட்டவில்லை.
சூர்யாவின் வளர்ப்பு அப்பா ஜோஜூ ஜார்ஜே ஒரு வில்லன்தான் இன்று இருக்க, இரண்டாவது பாதியில் அந்தமானில் இருக்கும் ‘விது’வும் ஒரு முக்கியமான வில்லன் ஆகிறார். அவரது பாடி லாங்குவேஜும், வில்லத்தனமும் ரசிக்க வைக்கின்றன. இந்த ஜோஜு ஜார்ஜ் தாண்டி பிரகாஷ் ராஜ், நாசர், ஜெயராம் என்று வெள்ளித்திரை பல கண்ட நிறைய பேர் வருகிறார்கள். போதாதற்கு டைரக்டர் கார்த்திக் சுப்பராஜின் செட் பிராப்பர்ட்டிகளான கஜராஜ், கருணாகரன், முத்துக்குமார் அன் கோவும் படத்தில் இருக்க, இன்னொரு பக்கம் தமிழ் உள்ளிட்டு முகம் தெரிந்த தெரியாத நடிகர்களும் சேர்ந்து கொண்டு ஸ்கீரினில் இடம் கொள்ளாத அளவுக்கு நட்சத்திரப் பட்டாளம்.
மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தாலும், காட்சிகளுடன் பார்க்கும் போது கூடுதல் ஸ்பெஷலாக இருக்கிறது. பின்னணி இசை மற்றும் பீஜியெம்கள் பிரமாதம் என்று சொல்ல வைத்து விடுகிறார். குறிப்பாக ‘கனிமா’ பாடல் மூலம் ‘ஒட்டுமொத்த தென் மாவட்ட’ங்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டம் ஆட வைத்த பாடல்கள், மிகச் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கூடவே ‘ஏத்திவிடு கும்மா’ பின்னணி இசையுடன் சண்டைக் காட்சிகள் அபாரம்..!
அது போல கேமராமேன் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் நாயகன் , நாயகி உள்ளிட்ட சகல் நடிகர், நடிகைகளையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தி விட்டார்.அதிலும் 15 நிமிடங்கள் நீளும் ஒரு சிங்கிள் டேக் காட்சியில், சண்டையையும், சாங்கையும் மிக்ஸ் வழங்கும் பணியில் ஸ். கிருஷ்ணா மிரட்டி விட்டார்.
டைரக்டர் – முன்னரே சொன்னது போல் லக்-கில் இயக்குநர் ஆன கார்த்திக் சுப்புராஜ் இந்த ரெட்ரோ ஸ்க்ரிப்ட ரொம்ப வருஷமா எழுதிட்டு இருந்தாராம்.போருக்கு எதிரான நிலைப்பாட்டை சொல்வது, சர்வாதிகாரத்தில் சிக்கி இருக்கும் மக்கள் என நிஜ நிகழ்வுகளை பிரதிபலித்து, அதே சமயம் கண்ணன் – கம்சன் கதையை புத்தரின் தம்மத்தோடு இணைத்தது, மக்களின் மீட்பர் என்றெல்லாம் யோசித்து அதை திரையில் கொண்டு வர திட்டமிட்டவர் அதற்கான திரைக்கதையில் கூடுதல் கவனம் காட்டி இருக்கலாம். அதிலும் ஒவ்வொரு சாப்டருக்கும் ஒரு நேம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் அந்த சாப்டருக்கும் காட்சிகளுக்கும் ஒட்டுமில்லாமல், உறவுமில்லாமல் இருப்பதெல்லாம் உறுத்தல்.
ஆனாலும் சூர்யா என்னும் திரைக் கலைஞனின் திரை விளையாடலைக் காண்பதற்காகவே இந்த ரெட்ரோ படத்தைக் காண செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்
மார்க் 3.5/5