பாக். விவகாரத்தில் மோடியின் கால்வேக்காடுத்தனம்!

பாக். விவகாரத்தில் மோடியின் கால்வேக்காடுத்தனம்!

மயத்தின் நிழலில், பைசரன் பள்ளத்தாக்கில் அமைதியைப் பாடியபடி இருக்கிறது பாகல்கம், அங்கே 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி உயிர்களைப் பறித்து, அமைதியை உடைத்தது.இதில் பெரும்பாலானோர் இந்திய சுற்றுலாப் பயணிகள். கடந்த இரு தசாப்தங்களில், காஷ்மீருக்கான 370 சிறப்பு சட்ட அங்கீகாரத்தை மோடி மற்றும் அமீத்ஷா இணைந்து நீக்கியதற்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான பொதுமக்கள் மீதான தாக்குதல் இது.

இது இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களை மீண்டும் தூண்டி இருக்கிறது, பிராந்திய புவிசார் நலன்களையும், உள்நாட்டு அரசியல் சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்தியது.துப்பாக்கிச் சத்தம் அடங்கிய பின், கேள்விகள் எஞ்சுகின்றன, உண்மையில் இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பு, காஷ்மீர் பிரச்சினை ஏன் நிரந்தரமான காயமாக உள்ளது?பாகிஸ்தானுடனான சீனாவின் “எல்லா கால நட்பு” இந்தியாவுக்கு நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்துள்ளது, சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை (CPEC) மூலம் மிகப்பெரிய தொகையை பெய்ஜிங் பாகிஸ்தானில் முதலீடு செய்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டுக்கணக்கின்படி பாகிஸ்தானின் மொத்தக் கடனில், அதாவது 130.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 13,060 கோடி) 30 % சீனாவிடம் இருந்து பெறப்பட்டிருக்கிறது, இந்தப் பொருளாதார சமன்பாடு தான் சீனாவின் பாகிஸ்தான் ஆதரவுக் குரல்.அமெரிக்கா தாலிபான்களிடம் தோற்று 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பிறகு , அவர்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பாகிஸ்தானை மட்டுமே சார்ந்துள்ளது, இதுதான் இந்திய-பாகிஸ்தான் மோதல்களை சிக்கலாக்குகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தும் நமக்கு நம்பிக்கையின்மையையே சேர்க்கின்றன, இலங்கை, 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இந்தியாவிடம் $3 பில்லியன் உதவி பெற்றது.ஆனால், ஹம்பன்தோட்டா துறைமுகக் குத்தகையை 99 ஆண்டுகளுக்கு சீனா எடுத்திருப்பதால் கிடைக்கும் பொருளாதார உதவிகளில் மயங்கிக் கிடக்கிறது ஶ்ரீலங்கா.மாலத்தீவு, முற்று முழுதாக இந்தியாவின் பெரியண்ணன் மனப்போக்கை விரும்பாமல் சீனாவுடன் நெருக்கமாகி நீண்டகாலமாகிறது. பங்களாதேஷ் 2024 ஆகஸ்டில் ஷேக் ஹசினா வெளியேற்றப்பட்ட பின் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கிறது.ஆகவே தெற்காசியாவின் புவிசார் அரசியல் என்பது அண்டை வீட்டார்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எந்த வகையிலும் சாதகமாக இல்லை.

இதற்கான காரணம் என்ன?இந்தியாவின் அரைவேக்காட்டுத்தனமான வெளியுறவுக் கொள்கைகள் மட்டும்தான். மோடி உள்நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முண்டாசு தட்டுவாரே தவிர…உலக அரங்கில் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போதுமான அறிவில்லை. அவருக்கு வாய்த்த ஆலோசகர்களும், அமைச்சர்களும் அண்டை நாடுகளுடன் உறவுகளை ராஜதந்திர ரீதியாகப் புதுப்பித்துக் கொள்ள எந்த வகையிலும் பொருத்தமானவர்கள் அல்ல.!

உக்ரைன் விஷயத்தில் அஜித் தோவல் மற்றும் ஜெய்ஷங்கரின் தவறான திட்டமிடல்களும், வழிகாட்டுதல்களும் ரஷ்யாவிடமும், அமெரிக்காவிடமும் மத்தள அடிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறது.இந்தியாவால் பாகிஸ்தான்-ஆதரவு லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைக்கப்படுகிற “தி ரெசிஸ்டென்ஸ் ஃப்ரண்ட்” (The Resistance Front) தான் பாகல்கம் தாக்குதலுக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்ட நம்மிடம் உறுதியான ஆதாரங்கள் இல்லை, உளவுத்துறை அனுமதியின்றி பைசரன் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பயணிகளுக்காக முன்னதாகவே திறக்கப்பட்டது உள்நாட்டு பாதுகாப்புக் குறைபாட்டை கேள்விக் குறியாக்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் மீதான ஆவேசமான உடனடிக் குற்றச்சாட்டுக்கள், சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் மற்றும் விசா கட்டுப்பாடுகள் போன்ற விவேகமற்ற பதிலடிகள் இருதரப்பிலும் பதற்றங்களை அதிகரித்தன.மோடியின் “கண்டுபிடித்து, தண்டிக்கும்” உறுதிமொழியானது துயரத்தில் உள்ள நாட்டின் குரலை எதிரொலிக்கிறது, ஆனால் அவரது கடந்த 10 ஆண்டுகால ஆட்சி பயங்கரவாதத்தை ஒழிக்க தைரியமற்று, இஸ்லாமிய வெறுப்பை உள்நாட்டில் விதைத்து இந்து தேசிய உணர்வுகளை ஒருங்கிணைக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விமர்சகர்கள் மட்டுமில்லை, பஹல்காம் தாக்குதலில் தனது கணவரை இழந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலின் மனைவியான ஹிமான்ஷி நர்வால் சொல்கிறார்,
“இஸ்லாமியர்களுக்கும், காஷ்மீரிகளுக்கும் எதிராகப் போக வேண்டாம், நமக்குத் தேவை அமைதியும், நீதியும்.”ஆனால், இந்த துக்ககரமான நிகழ்வு டிசம்பரில் நடைபெறவிருக்கின்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. தாக்குதல் நடந்த மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி அரசியல் மேடையில் இந்த நிகழ்வை விவரித்து வாக்கு சேகரித்தார்.

பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் இந்த நீண்ட கால சிக்கலின் செலவுகளை நமக்கு வெளிப்படுத்துகின்றன, 1989 இல் உருவாகிய காஷ்மீர் எழுச்சியிலிருந்து இன்றுவரை 3,00,000 இந்திய படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.ஆனால் எந்தப் பயனும் இன்றிப் பயங்கரவாதம் தொடர்கிறது, 2024-25 நிதி ஆண்டில் மட்டும் இந்தியா காஷ்மீர் பள்ளத்தாக்கின் பாதுகாப்புக்காக ஏறத்தாழ 6,21,941 கோடிகளைக் கொட்டி இருக்கிறது.

ஐரோப்பிய அமைதி நிறுவனம் ஒன்று இந்திய-பாகிஸ்தான்-சீன முக்கோணத்தை மற்றுமொரு உலகளாவிய பாதுகாப்பு பிரச்சினையாக விவரிக்கிறது.முத்தரப்பு பேச்சுவார்த்தை நிகழாத வரைக்கும், திறந்த மனதோடு காஷ்மீரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தாத வரைக்கும் இங்கு நிகழும் வன்முறையை நிறுத்தவியலாது என்பதுதான் உண்மையின் வெளிச்சம்.

மோடியின் விமர்சகர்கள், அவரை “அமெரிக்க பொம்மை” என்று குற்றம் சாட்டுகின்றனர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்க்கோ ரூபியோ இரத்தரப்பினருடனும் தொலைபேசியில் பேசி இருக்கிறார்.மேற்கத்திய கூட்டணிகளை முன்னுரிமையாக்கி இருநாடுகளும் மண்டல அமைதியைப் புறக்கணிக்கிறார்கள்.அமெரிக்கா, பாகல்கம் தாக்குதலைக் கண்டித்தாலும், ஐநாவின் நெறிமுறை நீக்கம், காஷ்மீரில் இணைய முடக்கம் போன்ற இந்தியத் தரப்பு மனித உரிமை மீறல்களை புறக்கணிக்கிறது.

இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு இப்பகுதியில் நிலவும் அமைதியின்மையை நீக்க வேண்டும் என்று இரட்டை வேடம் போடுகிறது அமெரிக்கா, இந்த இரட்டை நிலைப்பாடு அமைதிக்கு மிகப்பெரிய தடையாகிறது.மோடியின் போர் முழக்கங்கள் அப்பாவிப் பொதுமக்களை பீதியடையச் செய்கின்றன, ஆனால் ஒரு தீர்வும் இல்லை, இது “காஷ்மீர் பிரச்சினையை எதிர்கொள்ள அவருக்கு இருக்கும் அச்சத்தையும், தயக்கத்தையும் காட்டுகிறது” என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்த அரசியல் நாடகத்தின் கீழ் ஒரு ஆழமான விமர்சனம் உள்ளது, “தேர்தல் ஆதாயத்திற்காக இத்தகைய துயரங்களைப் பயன்படுத்துதல்”.இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாத நிகழ்வுகளை மையமாக வைத்து தேசிய உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாதிகளும், பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தேர்தல் பிரசாரங்களில் நாட்டின் துயரமான நிகழ்வுகளைப் பயன்படுத்துகின்றனர்.

இது உயரடுக்கு வகுப்பினருக்கு பயனளிக்கிறது, ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஆதிக்க உயர்வகுப்பினர், அரசியலிலும் சமூகத்திலும் இந்தத் துயரமான நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி செல்வாக்கு செலுத்தி, நாட்டின் உழைப்பு, செல்வம் மற்றும் அதிகாரத்தை மென்மேலும் கைப்பற்றுகின்றனர்.தெற்காசியாவின் மிகப்பெரிய ஆற்றலான இந்தியாவின் முன்னோக்கிய பாதை விவேகத்தையும், உறுதித் தன்மையையும் கோருகிறது, வாய்ப்பேச்சை அல்ல.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் மட்டுமே இந்த நீண்ட கால ஆழமான காயத்தை ஆற்ற முடியும்.இந்தியா போலியான ராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி பயங்கரவாதப் பகுதிகளை முற்றிலுமாகத் தாக்கி அழிக்க வேண்டும். இஸ்லாமிய வெறுப்பை தூண்டுவது அல்லது போர் முழக்கங்கள் இடுவதன் மூலம் வாக்குகளைப் பெறலாம், ஆனால் அது பிளவுகளை ஆழப்படுத்தும்.

கவிஞர் கலீல் ஜிப்ரான் கூறியது போல,“துன்பத்தில் இருந்து தான் வலிமையான ஆன்மாக்கள் உருவாகின்றன, காயங்களால் தான் குணமடைதல் நிகழ்கிறது”.இந்தியா தனது காயங்களை மீறி அமைதியை உருவாக்குமா, அல்லது பழிவாங்கல் மற்றும் அரசியல் சுயநலத்தில் மீண்டும் ஒருமுறை சிக்குமா?பதில் அதிகார அரசியல் அரங்கில் இல்லை, அமைதிக்காக ஏங்கும் எளிய இந்தியர்களின் இதயங்களிலும், காஷ்மீர் மக்களின் இதயங்களில் உள்ளது.

கை.அறிவழகன்

error: Content is protected !!