நாட்டின் முதல் ‘வாட்டர் மெட்ரோ சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!.
கேரளாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நாட்டிலேயே முதல் முறையாக 30 தீவுகளை இணைக்கும் வகையில் கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். கொச்சி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. கேரளா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வாட்டர் மெட்ரோ மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கும் சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டுமே இருந்த மெட்ரோ திட்டம் தற்போது கடல் வழியிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு படகில் 100 பேர் வரை பயணிக்கலாம்.

சென்னை,டெல்லி, பெங்களூரு,கொச்சி உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல், இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்படுகிறது. வாட்டர் மெட்ரோ சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், மின்சார சக்தி மூலம் இயக்கக்கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது. இதில் குளிரூட்டப்பட்ட படகுகள் பரந்த ஜன்னல்களைக் கொண்டிருக்கும். இதன் மூலம் உப்பங்கழியின் கவர்ச்சியான காட்சியை கண்டு ரசிக்கலாம்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த திட்டத்தில், முதல் கட்டமாக 8 வழித்தடங்களில் 15 அதி நவீன படகுகள் இயக்கப்படுகின்றன. மின்சாரத்தில் இயங்கும் இந்த படகுகள் முழுக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்டதாக இருக்கும். இதன் குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயிலுக்கு பயன்படுத்தும் மின்னணு கார்டை இதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். கொச்சி நகரை சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் அனைத்தையும் இணைக்கும் வகையில் இந்த வாட்டர் மெட்ரோ நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.1,336 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


