June 2, 2023

இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாள் சாலை விபத்தில் பலி!

மிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன் மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார் என்ற சோகச் செதி கிடைத்துள்ளது.

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்த விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில் இன்று தொடங்கும் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்த போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் எதிரே வந்த 12 சக்கரங்களுடன் கூடிய டிராய்லர், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவரை தாண்டி வந்து கார் மீது மோதியதில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன் நோங்போ சிவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீனதயாளனுடன் பயணித்த ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக் அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் இன்று(திங்கள்கிழமை) காலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், விஷ்வா தீனதயாளனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்கா, டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு ஹரியானா துணை முதலமைச்சர் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.