எஸ்பிஐ ஏடிஎம்-லிருந்து பணம் எடுக்கப் போறீங்களா? அப்ப இதை படிங்க!
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறை செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் மாற்றப்படுகிறது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-லிருந்து ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க 24 மணி நேரமும் ஓடிபி எண் சரிபார்ப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏடிஎம் அட்டைகளில் மோசடி செய்து பணம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நடைமுறை தற்போது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை நடைமுறையில் உள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம்கள் அனைத்திலும் இந்த நடைமுறை செப்டம்பர் 18-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், தற்போது இரவில் மட்டும் இருந்த இந்த பாதுகாப்புவழிமுறை, வாடிக்கை யாளர்களின் நலன் கருதி, 24 மணி நேரமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், இதனால் மோசடியாக ஏடிஎம்களில் பணம் எடுப்பது தவிர்க்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ஏடிஎம்-மில் இருந்து எடுக்கும் போது, ஏடிஎம் அட்டையின் பின் எண்ணுடன், செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி எண்ணையும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுக்க வசதியாக, வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது சரியான செல்லிடப்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.