‘மெய்ப்பட செய்’.- ஆடியோ லாஞ்ச் & பிரஸ் மீட் ஹைலைட்ஸ்

‘மெய்ப்பட செய்’.- ஆடியோ லாஞ்ச் & பிரஸ் மீட் ஹைலைட்ஸ்

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

தயாரிப்பாளர் நடிகர் P.R. தமிழ் செல்வம் பேசியது….

புதுமுகங்கள் நடித்து தயாரித்த படமாக இருந்தாலும் திரையுலக பிரபலங்கள் கே.ராஜன் உதயகுமார் வந்து வாழ்த்தியதற்கும் ஆதரவு தருவதற்கும் நன்றி.

நடன அமைப்பாளர் தீனா பேசியது..

ஒரு சின்ன கதையை வைத்து மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் முழு உழைப்பை தந்துள்ளார். பரணி சார் எந்த காம்ப்ரமைஸும் செய்ய மாட்டார். அற்புதமாக பாடல் தருவார் பாடலின் நீளத்தை குறைக்க நாங்கள் தான் மிகவும் கஷ்டப் படுவோம். படத்தில் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளார்கள், இப்படத்திற்கு இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியது…

இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துக்கள். இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிக தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. பாடலில் நாயகி தலையணையை பிய்த்து பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். நம்ம தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழை பார்த்து தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள் தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. ரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது ஆனால் இந்த கோரோனா காலத்தில் பல உதவிகளை பெற்று தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை கேட்டு தயாரியுங்கள். இப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசியது….

சின்ன படம் பெரிய படம் எதுவும் இல்லை பெரிய ஹீரோ படத்திற்கு ஆகும் செலவை தான் இப்படத்திற்கும் செய்து எடுத்துள்ளார்கள். மைனா படமெல்லாம் பல கோடி வருமானம் தந்தது. ஆனால் எங்கு தவறு உள்ளது என்றால் படத்தை கொண்டு போய் சேர்க்க வேண்டியதில் தான் தவறு இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அதற்கு சங்கங்கள் உதவி செய்ய வேண்டும். இப்படம் விஷுவல் பார்க்க அவ்வளவு பிடித்துள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நாயகி மதுநிக்கா பேசியது…

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இது எனது முதல் படம். செல்வம் சார் அவர்கள் தான் இந்தப்படத்தை இங்கு கொண்டு வர கஷ்டப்பட்டார். வேலன் சார் எல்லாத்தையும் பொறுமையாக சொல்லி தருவார். அவருக்கு நன்றி. ஆதவ் பாலாஜி சார் ஹீரோ, மிக நன்றாக நடித்துள்ளார். பரணி சார் இசை மிக அருமையாக வந்துள்ளது. பாடல்கள் மிகவும் பிடித்துள்ளது. ஃபைட் மாஸ்டர்ஸ் ரொம்ப அருமையாக எடுத்துள்ளார்கள் நான் நிறைய அடி வாங்கியிருக்கிறேன். என்னை எல்லோரும் நன்றாக பார்த்து கொண்டார்கள் எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பரணி பேசியது…

ஒரு மியூசிக் டைரக்டர் ஆசை என்னவாக இருக்கும் கம்பேக் தரவேண்டும், அவ்வளவு தான் இப்படத்தில் மிக உண்மையாக உழைத்துள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ராஜ்கபூர் பேசியது….

இந்தப் படத்தை மிக அருமையாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் பரணி பாடலில் அசத்தியுள்ளார் இப்போதெல்லாம் இப்படி பாடல் கேட்பது அரிதாகிவிட்டது. இந்தப்படம் நடிக்கும் போது மாயாண்டி குடும்பத்தார் படம் ஞாபகம் வந்தது. இயக்குநர் ஒரு நாளில் ஒரு சீன் தான் எடுப்பார். ரசிச்சு எடுப்பார். கேஜிஎஃப் ஓடுச்சு, ஆர் ஆர் ஆர் ஓடுச்சு என்கிறார்கள் ஆனால் அது ஓடி என்ன பயன். அதை நாலு வருடம் எடுத்தார்கள் அதெல்லாம் லாபமே தராது. மைனா 2 கோடியில் எடுத்து பல கோடி லாபம் பார்த்தது அது தான் படம். ஓடுது ஓடுது என சொல்லும் படத்தில் கதை கேளுங்கள் இருக்காது. ஜெய்பீம் எல்லாம் சின்ன பட்ஜெட்டில் எடுத்து உலகத்தையே மிரட்டியது அது மாதிரி இந்தப்படமும் வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.

நாயகன் ஆதவ் பாலாஜி கூறியது..,

எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி. நடன இயக்குனர், இசையமைப்பாளர், படதொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நன்றி. இது எனது முதல் படம், இந்த படம் புது ஹீரோ என்பதால் பலர் குறை சொன்னார்கள். என்னால் இந்த படம் தோற்க கூடாது என்று நினைத்தேன். இந்த படம் ஜெயித்தால், இன்னும் பல புதுமுகத்திற்கு வாய்ப்பு கிடைக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

இயக்குனர் வேலன் கூறியது..,

இந்த கதை எப்படி ஜெயிக்குமா என்ற சந்தேகம் வந்த போது, தயாரிப்பாளர் என்னை முழுதாய் நம்பினார். இது என்னை விட இயக்குநருக்கு முக்கியமான படம் இந்த படம் ஹிட் கொடுக்கும் என்று நம்பினார். இசையமைப்பாளர் பரணி சார் வேகமாக பணியாற்றினார். இசையமைப்பாளர் பரணி அவர்களுடைய பார்வை ஒன்றே போதுமே, படம் பார்த்த பின்னர் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்ற நினைத்தேன். அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் வேல் அவர்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும். நான் கேட்பதை அப்படியே கொடுத்தார் ஆக்‌ஷன் இயக்குனர். நடன இயக்குனரும் எனக்காக பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். நடிகர், நடிகையர் நன்றாக நடித்துள்ளனர். ராஜ்கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கபட்டது அல்ல. எல்லோருக்கும் நன்றி

இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர். ‘பார்வை ஒன்றே போதும்’ புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அற்புத இசையில் உமாதேவி, பரணி, வேலன் ஆகியோரின் வரிகளில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் பிரமிக்க செய்யும் வகையில் மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். ‘மிருதன்’ பட புகழ் கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Related Posts