முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!
![முதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2020/01/EPBgTlnUcAAlhNE.jpg)
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை களமாகக் கொண்டது ‘மீண்டும் ஒரு மரியாதை’.இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.
கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.
சபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக் குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார்.
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.