தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா தர்ணா போராட்டம்!

தன்னை ஒரு நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, மம்தா பானர்ஜி காந்தி சிலை முன்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. மேலும் 5 வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மதரீதியாக வாக்கு சேகரிப்பில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார் என்று, அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 24 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று இரவு 8 மணி வரை பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கருப்பு தினமாகும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தடையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவு அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதித்திருப்பது அரசியல் சட்டவிதிகளுக்கு மாறானது என, டுவீட்டர் பக்கத்தில் மம்தா பதிவிட்டுள்ளார்.