கலகத் தலைவன் – விமர்சனம்!

கலகத் தலைவன் – விமர்சனம்!

ன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலான திரைப் பயணத்தில் நான்கே படங்களை மட்டுமே  டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அந்த ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்ததோடு ரசிகர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற இளம் இயக்குநர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் மகிழ் திருமேனி. அவர் கைவண்ணத்தில் கடந்த மூன்று படங்களில் காட்டிய அதே க்ரைம் த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் பாணியிலே இந்த கலகத் தலைவன் படம் உருவாகி இருக்கிறது. தான் எடுத்துக் கொண்டக் கதைக்காக அவர் புகுத்தியிருக்கும் புதுமை, கார்ப்பரேட் மற்றும் அரசு கைகோர்ப்பதால் விளையும் பாதிப்பு,. அதை அம்பலப்படுத்தும் சாமானியன் எதிர் கொள்ளும் அவல நிலை என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதியதொரு பக்கத்தை காட்ட முயன்று இருக்கிறார்..!

அதாவது ஆட்டோமொபைல் நிறுவனமொன்று, கனரக வாகனமொன்றை சந்தையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கிறது. ஆனால், வாகனம் அறிமுகமாகும் இறுதி நேரத்தில், அந்த வாகனத்தில் இருந்து வெளியாகும் கரும்புகையில் நச்சு அதிகமாக இருப்பது தெரிய வர, அதை மறைப்பதற்கான முயற்சியை மேனேஜ்மெண்ட் செய்கிறது. ஆனால், இந்த தகவல் வெளியே கசிந்து மேற்படி நிறுவனத்தின் பங்கு மதிப்பு பாதாளத்தில் வீழ்கிறது, இதை அடுத்து கரும்புகை நச்சு விவகாரத்தை லீக் செய்தது யார்? என்று பார்த்தால் அதே நிறுவன லேபராக இருக்கும் நாயகன் உதய்.. அவர் ஏன் அப்படி செய்தார்? உதய்தான் இதை லீக் செய்தார் என்பதை எப்படி கண்டு பிடித்தார்கள் என்பதை எல்லாம் வைத்து ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் ஆடியிருப்பதே கலகத் தலைவன் படத்தின் கதை.

நாயகன் உதய்நிதி வழக்கமான கேரக்டரிலிருந்து மாறுபட்டு தன் பங்களிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பாவை இழந்த சோகம் குறையாத மன நிலை கொண்ட உடல்மொழி, அளந்து பேசும் பாணியிலான திருமாறன் என்ற கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால் எதிர்மறை பாத்திரத்தில் வரும் ஆரவ் அமோகமாக ஆர்பரிக்கிறார்.. படத்தின் பலமே ஆரவ் என்றே சொல்லலாம். அவரது முறுக்கேறிய உடல் கட்டும்,, சுடுக்காட்டு பிணம் எரிப்பவனின் பார்வையுமாக, அவர் நடத்தும் கொலைகார இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் எல்லாம் வேற லெவல்,

நாயகியாக வரும் நிதி அகர்வால், வழக்கமான ஹீரோயின்கள் போல் இல்லாமல், தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். காதலா… லட்சியமா என்று முடிவெடுக்கும் காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார். அதிலும் ஹீயினிடம் சொல்லும் ஹெண்ட்பேக் சைக்காலஜி பலத்த கைத்தட்டலை வாங்குகிறது.

இந்திய தலைநகர் டெல்லி தொடங்கி உலகளாவிய காற்று மாசு பிரச்சனையுடன் கார்ப்பரேட் நிறுவனங்களின் அத்துமீறல்களை டாக்குமெண்டரி பாணியில் இல்லாமல் சகலருக்கும் பிடித்த விதத்திலான திரைக்கதையுடன் அடுத்தடுத்து திருப்பங்களுடன் கதையைக் கொண்டு சென்ற மகிழ் திருமேனி திரைக்கதை வாவ் சொல்ல வைக்கிறது.

அதிலும் நாளைய தலைவர் என்று தமிழகத்தில் சில பலர் வர்ணித்து வரும் உதயநிதி வாயிலாகவே கார்ப்பரேட் நிறுவன அடாவடி,, அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு,, பொருளாதார சீர்கேடு,, அரசியல் என ஏகப்பட்ட விஷயங்களை புகுத்தி நளபாக விருந்தே படைத்து விட்டார் டைரக்டர் மகிழ் திருமேனி.. இவ்விருந்தில் படைக்கப்பட்ட பதார்த்தங்களில் உப்பு, காரம் மற்றும் இனிப்பு வகைகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றாலும் ஃபுல் மீல்ஸ் திருப்தியைக் கொடுக்கிறது.

மார்க் 3.75/5

Related Posts