மீனா சாப்ரியாவின் சுயசரிதை ‘அன்ஸ்டாபபிள்’ நூல் அறிமுக நிகழ்வு!

மீனா சாப்ரியாவின் சுயசரிதை ‘அன்ஸ்டாபபிள்’ நூல் அறிமுக நிகழ்வு!

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர்,  “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

யார் இந்த மீனா சாப்ரியா?

PVR திரைப் பிரிவு இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள 172 மல்டிபிளக்ஸ்களில் சுமார் 821 திரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள 44 திரையரங்குகளில் 272 திரையரங்குகளை மீனா சாப்ரியா கவனித்து வருகிறார். 9 திரைகள் கொண்ட இலங்கை மல்டிபிளக்ஸ்க்கும் அவர் தலைமை தாங்குகிறார்.

சாப்ரியா மே 22 அன்று இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார் . அவரது குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது மற்றும் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்கள். அகதிகள் முகாமில் வளரும்போது சவால்களை எதிர்கொண்ட போதிலும், சப்ரியாவின் வளர்ப்பு கடின உழைப்பு, இரக்கம் மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளை அவளுக்குள் விதைத்தது.

அதே சமயம் 17 வயதில் திருமணமாகி, 2 குழந்தைகளை பெற்றடுத்து, உளவியல் பட்டப்படிப்பு முடித்து, அதன்பின் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து அவரின் கார்ப்பரேட் வாழ்க்கையை INOX நிறுவனத்தின் மூலம் ஆரம்பித்து. PVR குழுமத்தின் தலைவரை சந்தித்தபின், PVRன் உதவி மேலாளராகிறார் மீனா சாப்ரியா. அதனைத் தொடர்ந்து, “UNSTOPPABLE ANGELS” என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் வாழ்க்கையை சிறப்பிக்க உதவி வருகிறார் மீனா சாப்ரியா.

இவரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசியதன் சாரம்சம்:

எழுத்தாளர் மீனா சாப்ரியா பேசும்போது, “நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. இது போன்ற ஒரு சாதாரண நிகழ்விற்கு வருகை தந்ததற்கு நன்றி. குட் நைட் படத்தின் வெற்றிக்கு பின் இங்கு வந்துள்ள தயாரிப்பாளர் யுவராஜுக்கு நன்றி. அண்ணாதுரை பற்றி சொல்லவேண்டுமென்றால் வார்த்தைகள் இல்லை. ஆனந்த் மஹிந்திரா சொன்னது போல், “இந்தியாவின் மேலாண்மை பேராசிரியர்” அண்ணாதுரை. நீண்டநாளாக எனக்கென ஒரு மேடை கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும், எனக்கான ஒரு மேடையை நான் அமைத்துக் கொண்டது மிகவும் பெருமையாக உள்ளது. நான் தவறான பாதையில் செல்கிறேன் என்பதை புரிந்துகொள்ள எனக்கு 20 வருடங்கள் ஆனது. “UNSTOPPABLE ANGELS” மூலமாக நான் பல பெண்களை உயரத்திற்கு கொண்டுவர நினைக்கிறேன். நான் 19 வருடமாக சினிமாத் துறையில் இருக்கிறேன். நான் கலந்து கொண்ட முதல் படப் பூஜை “MIC SET” ஸ்ரீராமின் படத்தின் பூஜை தான்” என்றார்.

ஆட்டோ அண்ணாதுரை பேசும்போது, “எனக்கு மேடை புதிதல்ல. ஆனால், இந்த மேடை புதிதாக இருக்கிறது. எனக்கு பத்திரிகையாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் நிறைய மரியாதை இருக்கிறது.மீனா சாப்ரியா அவர்களை விட அன்ஸ்டாப்பபில் லேடி என்று பார்த்தால் அவர்களின் தாயார் தான். அவரின் ஆசீர்வாதம் எப்போதும் தேவை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன், என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “முதலில் என்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்த போது நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால், அதன் பின் புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி செல்வது என்று சிந்தித்தேன். பின்பு மீனாவை தொடர்பு கொண்டு, அவரின் கதையை கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம். அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்த புத்தகம் பெரிய அளவில் ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதிய என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவரானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவரானவர்கள் உள்ளனர்” என்றார்.

நடிகை/தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது, “இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம். ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது. இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் ”என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது, “நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி”, என்றார்.

அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து “UNSTOPPABLE” புத்தகத்தை வெளியிட்டனர்.

error: Content is protected !!