32°C
விளம்பரம்
Advertisement

நீதிமன்றங்களில் நீடிக்கும் பாரபட்சம்:இந்திய பெண் வழக்கறிஞர்களின் குரல்!

admin Published: March 27, 2026 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய சட்டத்துறையில் பெண் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் கண்ணுக்குத் தெரியாத தடைகளையும், அமைப்பு ரீதியான பாகுபாடுகளையும் “இந்திய பெண் சட்ட வல்லுநர்களின் குரல்களைப் பதிவு செய்தல்” (Documenting Voices of Women Legal Professionals in India) என்ற புதிய ஆய்வறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (SCBA) நாடு முழுவதும் 2,604 பெண் வழக்கறிஞர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், தகுதி இருந்தும் பாலின ரீதியாகப் புறக்கணிக்கப்படும் கசப்பான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

81% விழுக்காடு: ஆண்களை விடக் கடினமான பயணம் ஆய்வில் பங்கேற்றவர்களில் 81.3 சதவீதப் பெண்கள் (2,116 பேர்), தங்களது தொழில்முறைப் பயணம் தங்களுக்கு நிகரான ஆண் வழக்கறிஞர்களைக் காட்டிலும் பலமடங்கு கடினமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். சட்ட அறிவு மற்றும் வாதத் திறமையில் சற்றும் குறையாத போதும், ‘பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்புகள் மறுக்கப்படுவதும், தரம் தாழ்ந்த பார்வையில் அணுகப்படுவதும் இன்றும் தொடர்கிறது.

பணியிடத்தில் 34% நேரடிப் பாகுபாடு சுமார் 34 சதவீதப் பெண் வழக்கறிஞர்கள் தங்களது அன்றாடப் பணிச் சூழலில் நேரடியான பாலினப் பாகுபாட்டை (Gender Bias) எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது வெறும் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல; நிறுவன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சட்டத்துறையில் ஊடுருவியுள்ள ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்கிறது இந்த அறிக்கை.

நிறுவன ரீதியான முட்டுக்கட்டைகள் இந்த ஆய்வு வெறும் புகார்களை மட்டும் அடுக்காமல், தரவு அடிப்படையிலான சில முக்கியக் காரணிகளை முன்வைக்கிறது:

  • வாய்ப்பு மறுப்பு: மிக முக்கியமான மற்றும் சிக்கலான வழக்குகள் (High-stakes cases) பெரும்பாலும் பெண் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படாமல், ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவது.

  • கலாச்சாரப் பாரபட்சம்: மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் அணுகுமுறையில் நிலவும் ஒருவித விலகல் மற்றும் பாராமுகம்.

  • அடிப்படை வசதிக் குறைபாடு: பல நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்கான கண்ணியமான அடிப்படை வசதிகள் (தனி அறைகள், முறையான கழிப்பறைகள்) இன்றும் எட்டாக்கனியாகவே இருப்பது.

இந்திய நீதித்துறையின் மாண்பைக் காக்கப் போராடும் பெண் வழக்கறிஞர்கள், தங்களுக்குள்ளேயே நிலவும் இந்தப் பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். திறமைக்கான அங்கீகாரமும், சமமான வாய்ப்புகளும் வழங்கப்படும் போது மட்டுமே இந்தியச் சட்டத்துறை முழுமையான ஜனநாயகத் தன்மையைப் பெறும் என்பதை இந்த ஆய்வு உரக்கச் சொல்கிறது.

தமிழ்செல்வி

உடனடி செய்திகள்