தமிழ் குரல் / AI Voice
வணிக உலகில் இலக்குகளைத் துரத்தி ஓடும் விற்பனைப் பிரதிநிதிகளின் வாழ்க்கை வெறும் வணிகம் மட்டுமல்ல; அது மனித மனங்களை வெல்லும் உளவியலும் கடுமையான போராட்டமும் நிறைந்தது. நாளுக்கு நாள் மாறும் சந்தைப் போட்டி, கடினமான இலக்குகள், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் மனநிலைகள் மற்றும் தொடர் நிராகரிப்புகளுக்கு மத்தியில் நம்பிக்கையை விடாமல் முன்னோக்கிச் செல்வதே ஒரு சேல்ஸ்மேனின் நிஜ வாழ்க்கை. அலுவலக மேசைகளில் உட்கார்ந்து கணக்கிட முடியாத கள யதார்த்தங்களை எதிர்கொண்டு, வெயிலும் மழையும் பாராமல் வாடிக்கையாளர்களின் கதவுகளைத் தட்டி நிறுவனத்தின் வர்த்தகத்தை ஈட்டிக்கொடுக்கும் இவர்களின் உழைப்புதான் பல வணிக சாம்ராஜ்யங்களின் அடித்தளமாக அமைகிறது. ஆனால், இத்தகைய எதார்த்தமான விற்பனை உலகத்தையும் அவர்களின் உண்மையான வாழ்வியலையும் ஆழமாகப் பதிவு செய்யாமல், மேலோட்டமான சம்பவங்களுடன் கோட்டை விட்டிருக்கும் படமே ‘கோல்ட் கால்’.
பிரபல நிறுவனம் ஒன்று தனது பொருட்களை விற்க நான்கு விற்பனைப் பிரதிநிதிகளை நேர்காணல் செய்து தேர்வு செய்கிறது. அந்த நான்கு இளைஞர்களும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நிறுவனத்தின் மேலாளர் அவர்களுக்கு ‘கோல்ட் கால்’ என்றால் என்ன என்பதையும், விற்பனைத் துறையில் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் களத்திற்கு அனுப்புகிறார். சித்து தவிர மற்ற மூவரும் இதைச் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கின்றனர்; சித்து மட்டும் தனக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைகிறார். அந்தச் சமயத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் மீது சித்துவுக்குக் காதல் துளிர்விட, அதனால் அவரது கவனம் சிதறி இலக்கைத் தவறவிடுகிறார். இன்னும் சில மாதங்களில் இலக்கை எட்டவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என்று மேலாளர் எச்சரிக்கிறார். இந்தச் இக்கட்டான சூழ்நிலையில், பிரபல தொழிலதிபர் ஒருவரின் குழந்தை கடத்தப்படும் வழக்கில் இந்த நான்கு இளைஞர்கள் மீதும் பழி விழுகிறது. காவல்துறையின் தேடுதலில் சிக்கித் தவிக்கும் இவர்கள், அந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படித் தப்பினார்கள், தங்களது இலக்கை எப்படி நிறைவு செய்தார்கள் என்பதே இப்படத்தின் ஒட்டுமொத்தக் கதைக்களம்.
https://www.youtube.com/watch?v=TjCghxM7uh
தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த நடிகர்கள் கதையின் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நான்கு பேரும் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். குறிப்பாக ஆந்திராவிலிருந்து வந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீ வைஷ்ணவ் மிகவும் எதார்த்தமாகவும் அப்பாவித்தனமாகவும் நடித்துக் கவனம் ஈர்க்கிறார். நாயகிகளாக வந்துள்ள அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி மற்றும் கீர்த்தனா புல்கி ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறுகிய இடைவெளியில் நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பயிற்சியாளர் உள்ளிட்ட இதர துணைப்பாத்திரங்களும் கதைக்குத் தகுந்த தேர்வாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவாளர் சரவணனின் கேமரா கோணங்கள் கூடுதல் பிரம்மாண்டம் இல்லாமல் எளிய முறையில் கதைக்குத் தேவையான தளத்தை வழங்கியுள்ளன. பிரணவ் கிரிதரனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கமர்ஷியல் சினிமாவுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இயல்பாக வந்துள்ளன. படத்தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகத்தின் கத்தரிக்கோல் பணியில் பெரிய குறைகள் ஏதுமின்றி ஓட்டம் சீராக உள்ளது.
இளைஞர்களின் இன்றைய சோம்பேறித்தனமான போக்கையும் அவர்களின் துள்ளலான வாழ்க்கை முறையையும் பின்னணியாகக் கொண்டு இந்தப் படைப்பை இயக்கியுள்ளார் இயக்குநர் தம்பிதுரை. ஆனால் விற்பனையாளர்களின் பணி எத்தகையது என்பதை ஆழமாக அணுகாமல், அவர்களின் வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களை மட்டும் கொண்டு ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், அழுத்தமான திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான எழுத்து இல்லாத காரணத்தால் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது.
ரேட்டிங்: 2.25 / 5
