சூ மந்திரகாளி – விமர்சனம்

சூ மந்திரகாளி – விமர்சனம்

பொழுது போக்கு சாதனங்களில் தலையானது ஆன சினிமாக்களில் நகைச்சுவைக்கென தனி வரவேற்பு எப்போதும் உண்டு. அதை கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் ஒரு ஸ்வீட் சர்ப்பரைஸாக வந்துள்ளது சூ மந்திரகாளி. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஃபேண்டஸி சிந்தனை அதிகம் இருக்கும். நம் ஊரில் முண்டாசுப்பட்டி மாதிரி சிந்தனைகள் அபூர்வம். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ளது இந்தப்படம். படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி விடுகிறார்கள் அதே வகையில் படம் முழுக்கவே சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

பங்காளியூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பகையையே வாழ்க்கையாக கொண்டு பில்லி சூனியம் வைத்து ஒருவரை ஒருவர் கெடுத்துக்கொள்கிறார்கள். கதாநாயகன் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியகாரனை கூட்டி வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான். அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகான பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும், அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான். ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா? பங்காளியூர் திருந்தியதா? என்பதை நகைச்சுவையாக சொல்லி மலர்ந்த முகத்துடன் அனுப்புகிறார்கள்

தொடக்கதில் காட்டப்படும் பொறாமை நிறைந்த அந்த கிராமமே படம் எப்படியானது என்பதை நமக்கு தெளிவாக சொல்லி விடுகிறது. அடுத்ததாக காட்டப்படும் அந்த மந்திர தந்திர கிராமம் உண்மையிலேயே நம்மையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. மந்திர கிராமத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனி தனி லாஜிக் சொல்லி அதை இறுதி வரையிலும் கொண்டு வந்தது சிறப்பு. படத்தில் சீரியஸ் கதை எதுவும் எல்லாமே காமெடி என்பதை முன்பே முடிவு செய்து களமிறங்கி உள்ளார்கள்.

ஒரு மந்திர கிராமம் அதில் இருக்கும் சக்திகள், அந்த கிராமத்தில் திருடவந்து மாட்டிக்கொண்டு அங்கேயே சுற்றும் திருடன் என சிறு சிறு விசயங்களும் ஈர்க்கிறது. ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி வருவது படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. புதுமுகங்களின் உருவாக்கத்தில் இது எதிர்பாரா சர்ப்ரைஸ் என்றே சொல்லலாம். படம் முழுக்க கையில் கத்தி வைத்து தூக்கி கொண்டே திரியும் கிராமத்து ஆள், முழுக்க முழுக்க பெண் வேசத்தில் படம் முழுக்க வரும் வரும நண்பன், ஊரின் தோற்றம். இசை மரம், என படத்தின் டீடெயிலிங் பக்கா.

போகிற போக்கில் கடவுள் முருகன் முதற்கொண்டு காமெடியாக்கிவிட்டார்கள். ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் என்பதை மறைத்து ஒரு பிரமாண்ட படத்தை பார்க்கும் தோற்றத்தை தந்துள்ளது. இசை படத்தின் மர்மத்திற்க்கு பலம் கூட்டியிருக்கிறது. மாய மந்திர காட்சிகளில் சிஜி தமிழுக்கு புதுசு. ஒரு சின்ன பட்ஜெட் படமென்ற தோற்றத்தை மொத்தமாக மறைத்த வகையில் தொழில்நுட்ப குழு அபாரமாக உழைத்திருக்கிறது. இயக்குநர் ஈஸ்வர் தமிழில் வரும் படங்களில் இருந்து புதிதாக சிந்தித்தற்கே பாராட்டலாம்.

புதுமுகங்கள் இப்படி எல்லாம் சர்ப்ரைஸ் தரும் அதே நேரத்தில் படத்தின் அமெச்சூர் நடிப்பிற்கும் அவர்களே காரணமாகி விடுகிறார்கள். பொறமை பிடித்த கிராமம் என்று சொன்ன பிறகும் மீண்டும் மீண்டும் அதை வைத்து வரும் காட்சிகள் போர். நாயகன் மேக்கப் பல இடங்களில் ஒட்டவே இல்லை. பரபரவென செல்லும் காட்சியில் இடைவேளைக்கு பிறகு பல இடங்களில் தொய்வு. ஒரு பக்கம் நல்ல படம் பார்த்துகொண்டிருக்கிறோம் என்கிற நினைப்பை அமெச்சூர் நடிப்பும் ரிபீட் காட்சிகளும் கெடுக்கிறது.

மொத்தத்தில் ஒரு நல்ல பட்ஜெட்டில் தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தால் தமிழின் முக்கிய படைப்பாக இப்படம் கவனிக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தமிழில் ஒரு சிறந்த ஃபேண்டஸி முயற்சியாக காமெடி கலக்கலில் கவர்கிறது இந்த சூ மந்திரகாளி.

மார்க் 2.75/5

error: Content is protected !!