நீதிமன்றங் களை மூடவேண்டும் என்று நினைக்கிறீர்களா? – சுப்ரீம் கோர்ட் காட்டம்
சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகளை நியமிக்க ‘கொலீஜியம்’ நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் குழு இந்த பரிந்துரையை மேற்கொண்டு வருகிறது. இந்த நடைமுறையில் குறைகள் இருப்பதால், இதற்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை செல்லாது என்று அறிவித்த சுப்ரீம் கோர்ட் ‘கொலீஜியம்’ நடைமுறையை மேம்படுத்த வரைவுத் திட்டம் ஒன்றை தயாரிக்கும் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.

மத்திய அரசு சார்பில் வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் பிரதியை சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எஸ். தாக்கூரிடம், மத்திய சட்டத்துறை ஒப்படைத்த நிலையில் சுப்ரீம் கோர்ட், அதில் உள்ள சில பிரிவுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ‘கொலீஜியம்’ முறைப்படி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்குகு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை மீது உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய சட்ட ஆணைய பரிந்துரைப்படி, நீதிபதிகளை நியமிக்க கோரும் வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜரானார். நீதிபதிகள் நியமனம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். அவர் தொடர்ந்து இதே பதிலை தெரிவித்து வருவதாக கூறிய தலைமை நீதிபதி, ‘வரைவுத் திட்டம் தயாராகட்டும். அதற்காக நீதிபதிகள் நியமனத்தை ஏன் நிறுத்தி வைக்கிறீர்கள்? உயர் நீதிமன்றங்களுக்கு நியமிப்பதற்காக கடந்த பிப்ரவரி முதல் 75 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்மீது மத்திய அரசு எந்த முடிவும் எடுக் கவில்லை. அனுப்பிய பட்டி யல் மீது அதிருப்தி இருந்தால், திருப்பி அனுப்புங்கள். அதை கொலீஜியம் பரிசீலிக்கும்.
அதைவிடுத்து, பரிந்துரைகள் மீது முடிவெடுக்காமல் இருந்தால் நீதித்துறையே முடங்கும் நிலை ஏற்படும். அதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 40 சதவீத நீதிபதிகளைக் கொண்டு உயர் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாற்றல் உத்தரவுகளைக் கூட பிறப்பிக்கவில்லை. இதனால், நீதித்துறையில் குழப்பமான நிலை நிலவி வருகிறது. நீதிபதிகள் இல்லாமல் நீதிமன்றங் களை மூடவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
விசாரணைக் கைதிகள் சிறைகளில் 13 ஆண்டுகள் வரை வழக்கு விசாரணைக்கு வராமலேயே அவதிப்பட்டு வரு கின்றனர். அவர்கள் வாழ்நாளை அங்கேயே கழிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? மத்திய அரசு தொடர்ந்து இதேபோக்கை கடைபிடித்தால், சட்டரீதியாக நாங்கள் தலையிட வேண்டியது வரும். கொலீஜியம் அளித்த பரிந்துரை இப்போது எங்கே இருக்கிறது, என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சமர்ப்பிக்கும்படி உத்தரவிட வேண்டியது வரும்’ என்று எச்சரித்தார்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் நிலை குறித்து மத்திய அரசிடம் தெரிவித்து உத்தரவுகளைப் பெற அட்டர்னி ஜெனரல் அவகாசம் கோரினார். அவருக்கு அனுமதி அளித்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்


