பணப்பந்தய விளையாட்டுகளுக்குத் தடை: முடங்கியது 6 பில்லியன் டாலர் சாம்ராஜ்யம்!
இந்தியாவின் ஆன்லைன் கேமிங் உலகம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது. ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறைச் சட்டம் 2025’ அமலுக்கு வந்த பிறகு, பணத்தைப் பந்தயமாக வைத்து விளையாடும் (Real-Money Gaming – RMG) முறைகள் சட்டவிரோதமாக்கப்பட்டன. இதன் விளைவாக, சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஒரு பிரம்மாண்டமானத் துறை இன்று ஆட்டம் கண்டுள்ளது.
வருவாய் வீழ்ச்சியும் நிறுவனங்களின் தவிப்பும்
கடந்த காலங்களில் இந்தியாவின் மொத்த கேமிங் வருவாயில் 71 சதவீதத்தைப் பணப்பந்தய விளையாட்டுகளே ஈட்டித் தந்தன. ஆனால், தடை விதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், களநிலவரம் தலைகீழாக மாறியுள்ளது.

-
வருவாய் இடைவெளி: பணப்பந்தய விளையாட்டுகளில் 15% பயனர்கள் பணம் செலுத்தி விளையாடினர். ஆனால், மற்ற சாதாரண கேம்களில் (In-app purchase) வெறும் 0.5% பேர் மட்டுமே பணம் செலவழிக்கின்றனர். இந்த மிகப்பெரிய வருவாய் இடைவெளி நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளது.
-
நிறுவனங்களின் நிலை: பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பவை தங்களின் பிசினஸ் மாடலை அடியோடு மாற்றி, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
முன்னணி நிறுவனங்களின் ‘ரூட்’ மாற்றம்
சந்தையில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த நிறுவனங்கள் இப்போது தப்பிப்பிழைக்கப் போராடி வருகின்றன:
-
Dream11: தனது வருவாயில் 95 சதவீதத்தை இதிலிருந்தே ஈட்டிய இந்த நிறுவனம், இப்போது நேரடி விளையாட்டு ஒளிபரப்பு, பங்குச்சந்தை புரோக்கிங் மற்றும் ஏஐ (AI) சார்ந்த சொத்து மேலாண்மை எனப் பல ஸ்டார்ட்-அப் கிளைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.
-
PokerBaazi: சுமார் 270 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பிறகு, மாதம் ₹400 என்ற சந்தா (Subscription) அடிப்படையில் சாதாரண கேம்களை வழங்கும் முறைக்கு மாறியுள்ளது.
-
Zupee: ஜோதிடம், குறும் படங்கள் மற்றும் இலவசமாக விளையாடும் கேம்கள் எனப் பல புதிய களங்களில் சோதனைகளைச் செய்து வருகிறது.
-
Nazara Technologies: போக்கர்பாசி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 832 கோடி ரூபாயை இழந்ததுடன், ஒரு காலாண்டில் மட்டும் ₹900 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
நிர்வாகச் செலவுகளில் அதிரடி வெட்டு
முன்பு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைத்த நிறுவனங்கள் இப்போது சிக்கனத்தைக் கடைப்பிடிக்கின்றன. 2024-25 நிதியாண்டில் ‘ட்ரீம் 11’ (Dream11) மட்டும் ₹3,900 கோடிக்கும் மேல் விளம்பரங்களுக்குச் செலவிட்டது. ஆனால் இப்போது:
-
அலுவலக வாடகையை 30% வரை குறைத்துள்ளன.
-
விளம்பரம், ஆலோசனை மற்றும் மார்க்கெட்டிங் செலவுகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன.
-
திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதே இந்த நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
உண்மையான பிரச்னை என்ன?
இந்திய கேமிங் துறையின் இந்தச் சரிவுக்குப் பின்னால் ஒரு கசப்பான உண்மை ஒளிந்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
“பணப்பந்தய விளையாட்டுகள் என்பது இந்தியாவின் சொந்தப் படைப்பாற்றல் (Original IP) இல்லாத குறையை மறைத்து வைத்திருந்தது. கதை சொல்லல், டிசைன் மற்றும் விளையாட்டுத் தரம் போன்றவற்றை விட, பணத்தைப் பரிசாகக் கொடுப்பதையே இந்த நிறுவனங்கள் நம்பியிருந்தன. இப்போது பணம் என்ற ஈர்ப்பு இல்லாதபோது, மக்களைத் தக்கவைக்கத் தேவையான திறமை பல நிறுவனங்களிடம் இல்லை,” என்கிறார் இந்திய கேம் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் இணைத் தலைவர் விஷால் கொண்டல்.
எதிர்காலம் என்ன?
நிறுவனங்களுக்குக் காத்திருக்கும் மற்றொரு பெரிய ஆபத்து, ₹2.5 லட்சம் கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி (GST) நிலுவைத் தொகை தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு. இதன் தீர்ப்பு சாதகமாக வந்தால் மட்டுமே சில நிறுவனங்கள் மூச்சுவிட முடியும். இருப்பினும், பணத்தை மட்டும் குறியாக வைக்காமல், தரமான விளையாட்டுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்திய கேமிங் துறை மீண்டும் தலைதூக்க முடியும்.
தமிழ்செல்வி


