‘தி பெட்’ (The Bed). – டீசர் வெளியீட்டு விழாத் துளிகள்!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி பெட்’ (The Bed). இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித்துள்ளனர். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘வெத்து வேட்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் மணிபாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ‘தி பெட்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன், தயாரிப்பாளர் சங்க (கில்ட்) செயலாளர் ஜாக்குவார் தங்கம், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் ரஷீக் ஆகியோர் கலந்துகொண்டனர். .
இந்த விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, “இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரஸ் மீட் வைக்க வேண்டுமா என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், மக்கள் தொடர்பாளர் இருவரும் மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
ஆனால் இவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த இந்த இரண்டு வருடங்களாக கோவிட்டால் எல்லாமே மாறிப் போயிருந்தது. படம் துவங்கும் தேதியையும் முடிக்கும் தேதியையும் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு நடந்தாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். முதலில் டைட்டிலைக் கேட்டதுமே சற்று தயக்கமாகத்தான் இருந்தது. கதையும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது. சில பேர் சொல்லும்போது ஒன்றாகவும், படமாக்கும்போது வேறு ஒன்றாகவும் செய்வார்கள். படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் அதிலிருந்து பின் வாங்கவும் முடியாது. அப்படி செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஹேட்ஸ் ஆப் சிம்பு. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். யாரும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத நடிகர் சிம்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஒரு அற்புதமான மனிதர். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் டோட்டலாக இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்து விடுவார். சிலர் வேறு மாதிரி கதையை குழப்பினாலும்கூட கண்டுகொள்ள மாட்டார். இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே படத்திற்கான ஒளிப்பதிவாளரை நான் சிபாரிசு செய்யலாமா எனக் கேட்டேன். ஆனால் ஏற்கனவே கோகுலை ஒப்பந்தம் செய்துவிட்டேன்.. அவர்தான் என் முதல் சாய்ஸ் என்று இயக்குநர் மணிபாரதி கூறினார். ஆனால் படப்பிடிப்பின்போதுதான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். ஒருவரை பற்றி எதுவுமே தெரியாமல் அவரது திறமையை எடைபோடுவது எவ்வளவு தவறு என்பதை கோகுல் எனக்கு உணர்த்தினார். அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளை படமாக்கியதுடன் என்னையும் மிக அழகாகக் காட்டியுள்ளார்.
ஊட்டி குளிரில் குறைந்த அளவு ஆடையுடன் நடுங்கிக் கொண்டே சிரமப்பட்டு நடித்தார் சிருஷ்டி டாங்கே. ஆனால் இயக்குநரோ ஸ்வெட்டர் குல்லா என குளிருக்கு இதமாக அணிந்து கொண்டு மானிட்டருக்கு பின் ரொம்ப பாதுகாப்பாக அமர்ந்து கொண்டிருந்தார். ஏன், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு வருவதுபோல கதை எழுத கூடாதா என்று கூட அவரிடம் கேட்டுவிட்டேன். படங்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும்போது சில விஷயங்களில் நம் யோசனையை சொல்வோம்.. அது ஒரு நடிகர் என்று இல்லாமல் பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும். எல்லா இயக்குநர்களும் அவர்கள் மனதில் கதையை எப்படி உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அப்படித்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், படம் வெளியான பிறகு உண்மையான வெற்றி பார்வையாளர்களிடம் இருந்துதானே கிடைக்கும்..? அதனால் ஹீரோக்கள் சொல்லும் சில விஷயங்களையும் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
என்னைப் பொருத்தவரை ஐடியா கொடுப்பது தவறில்லை. ஆனால் குறுக்கீடு செய்யக் கூடாது. இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில்கூட எனக்கு சற்று கருத்து மாறுபாடு இருந்தது. இயக்குநரிடம் அதை மாற்றி விடலாமா எனக் கூறினேன். ஆனாலும் தான் இப்படித்தான் மனதில் உருவகப்படுத்தி வைத்திருப்பதாக அவர் சொன்னார். சரி என அவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன். அவர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைக் கொஞ்சமும் மாற்றாமல் அவர் போக்கிலேயே எடுத்துவிட்டார். அதேசமயம் ‘தி பெட்’ என பெயர் வைத்திருந்தாலும் குடும்பத்துடன் பார்க்கும் அழகான படமாக இது இருக்கும். இந்த டீசர் எல்லோரையும் கவரும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் படம் சூப்பராக வந்திருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்…” என்றார்.
இயக்குநர் – எஸ்.மணிபாரதி, ஒளிப்பதிவு – கே.கோகுல், படத் தொகுப்பு – ஜே.பி., இசை – தாஜ்நூர், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்கம் – பழனிவேல், சண்டை இயக்கம் – ஆக்சன் பிரகாஷ், புகைப்படங்கள் – ராஜ் பிரபு, நிர்வாக தயாரிப்பாளர் – A.V. பழனிச்சாமி, தயாரிப்பாளர் – வி.விஜயகுமார், லோகேஸ்வரி விஜயகுமார், கே.கந்தசாமி, கே.கணேசன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் & ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ், மக்கள் தொடர்பு – A ஜான்.