ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை!- அமைச்சர் பொன்முடி தகவல்!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (1-7-2021) பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் கூறியதாவது:-
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணி நியமணங்களும் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
அனைத்து பல்கலைகழகத்திலும் MPHIL படிப்பு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் சேர்க்கை நடைப்பெறும்.
மேற்கொண்டு பல்கலைத் கழகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசித்து தீர்வு காணப்படும்
கடந்த ஆண்டு நடைபெற்றது போலவே DOTE முறையில் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.
ஒற்றை சாளர முறையில் இந்த ஆண்டும் ஆன்லைன் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
கடந்த ஆண்டை போலவே தொழிற்நுட்பக்கல்வி இயக்ககமே கலந்தாய்வை நடத்தும்
கடந்த ஆட்சியில் மூன்று பல்கலை கழகங்களில் நடைபெற்ற ஊழல்கள் விசாரிக்க இணை செயலாளர்கள் மற்றும் துணை செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் எப்படி கணக்கிட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது..அதன் அடிப்படையில் தான் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தனித்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யும்.
இவ்வாறு, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் கூறினார்.