ஒரு நாள் நைட் தூக்கமில்லாம போச்சா? அச்சச்சோ.. ஆபத்து?
ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்குக் கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் முன்னரே உறுதிபட சொல்லி வந்தார்கள். இதனிடையே ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது நம்முடைய மரபணுக்களில் மாற்றம் ஏற்படுத்தி, உடல் பருமன் அல்லது டைப் 2 நீரழிவு வியாதிக்கு வழிவகுத்துவிடும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.

ஸ்வீடனில் உள்ள உப்ஸால பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்களும் கரோலின்ஸ்கா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இது. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதால் நம் உடலின் செல்களில் இயங்கும் உயிரியல் கடிகாரம் (பயோலஜிகல் க்ளாக்) குழப்பம் அடைந்துவிடுமாம். ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது உடலுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் தூக்கமின்மையால் உடலின் வளர்சிதை மாற்றங்கள் ஏற்பட்டு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வினை முடித்தார்கள்.
1900-களில் எட்டு மணி நேரமாக இருந்த தூக்கமானது, இன்றைய அவசர உலகில், அரக்கப்பறக்க அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதில் தொடங்கி இரவில் படுக்கையில் சாயும்வரை ஓய்வில்லாத ஓட்டக்களமாக உள்ளது. பரபரப்பான இந்த வாழ்க்கை முறையில் தூக்கம், ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு.
பல வீடுகளில் பணியிலிருந்து திரும்பிய பிறகும்கூட செல்போனில் பேசுவது, கணினியில் வேலை செய்வது போன்றவற்றில் நேரம் செலவழிவதால் பலருக்கும் தூக்க நேரம் சுருங்கிப்போகிறது.கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரம் மறைந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாச்சாரம் வந்தபிறகு முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் தனிமை அவர்களுடைய தூக்கத்துக்கு வேட்டு வைக்கிறது.
இவைகளையெல்லாம்க் கவனத்தில் கொண்டு நடந்தஇந்த ஆராய்ச்சியில் மேலும் தீவிர சோதனைக்குப் பிறகு உயிரியல் கடிகாரத்தில் குழப்பம் ஏற்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் (உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரழிவு நோய்). இதற்குக் ஒரே காரணம் இரவு முழுவதும் தூக்கமின்மை என்கிறார் உப்ஸாலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மற்றும் முதன்மை எழுத்தாளர் ஜோனாதன் செடர்னேஸ்.
15 நபர்கள் கொண்ட ஒரு சிறிய குழுவினரை இரண்டு நீண்ட இரவுகள் ஆய்வகத்தில் தங்க வைத்து ஆராய்ச்சியை தொடங்கினார்கள்.முதல் நாள் அவர்களை உறங்க விட்டு அடுத்த நாள் முழு இரவும் தூங்காமல் இருக்கச் சொன்னார்கள். அதன் பின் அவர்களின் திசுக்களை எடுத்து சோதனைக்கு உட்படுத்தியதில் அவர்களின் மரபணுக்களில் கண்கூடாக சில வளர்சிதை மாற்றங்கள் நடந்துள்ளது தெரிய வந்தது.
இரவுப் பணி செய்பவர்கள், இரவு முழுவதும் தூக்கம் வராமல் பகலில் தூங்குபவர்களுக்கு நிச்சயம் டிஎன்ஏ பிரச்னைகள் ஏற்படும். இது நாளடைவில் வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் என்று முடிவை பதிவு செய்து அதனுடன் சேர்த்து மருத்துவ ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது இந்த ஆய்வுக் குழு.


