அனைத்துலக நடன தினம்!

- பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும். முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுத்துவதுமே இந்த சர்வதேச நடன தினத்தின் முக்கிய இலக்காகும்.
1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது.இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது, நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நூவர் என்பவரின் பிறந்த தினம் ஆகும். பிரெஞ்ச் நடனக்கலைஞரான இவர் பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர்.
2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் ”உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப் படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை” என்றார்.
2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள், நடன நிறுவனங்கள் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைப்புகளை தொடர்பு கொண்டு பள்ளிசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல், நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல், வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின் International Dance Council (CID), தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விஷயம் இன்றும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும்> இது விஷயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வளவிற்கும் 1981ல் நடனத்திற்கு முறையான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியம் ஒன்றினை Coalition for National Dance Week உருவாக்கியுள்ளனர்.ஆனாலும் இந்த நாள் இன்னும் முழுமையடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!
இந்நிலையில் துக்கமும் கொண்டாட்டமாக மாறும் கலை, நடனத்தில் மட்டுமே சாத்தியம். உலகம் முழுவதும் பல்வேறு நடனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டுக்கான பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. கொஞ்சம் டீட்டெய்லா சொல்லப்பா கட்டிங் கண்ணையா என்று குரல் கொடுத்ததும் வந்த சேதியிதோ :
உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது.. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் சாக்கியார் கூத்து, கதகளி, மோகினி ஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்,
ஆந்திராவில் குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்
கர்நாடகாவில் யக்ஷகானம்:
ஒரிஸ்ஸாவில் ஒடிசி:
மணிப்பூரில் மணிப்புரி, லாய்-ஹரோபா,
பஞ்சாப்பில் பாங்ரா, கிட்டா,
பீகாரில் பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய், நாச்சாரி,
அஸ்ஸாமில் பிகு,
ஜம்மு-காஷ்மீரில் சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.
அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம்.
பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி.
இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம். தென்னிந்தியக் கிராமிய நடனங்கள்- தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்) இலவா, நிக்கோபாரிய நடனம்.
வட இந்தியக் கிராமிய நடனங்கள் – டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி.
கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்- நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் .
மேற்கிந்திய நடனங்கள் கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ.