என் கணவர் உடலை கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்க செய்ய உதவுங்கள்!- வீடியோ

என் கணவர் உடலை கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்க செய்ய உதவுங்கள்!- வீடியோ

இயற்கையாகவோ, விபத்தாலோ, உடல் நலக்குறைவாலோ சகலரும் சந்திக்க வேண்டிய ஒரு சவால் மரணம். அப்படி மரணமடைந்த உடலுக்கான சடங்குகள் எப்படி நடைபெற வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நம்பிக்கைகள் உண்டு. இந்துக்கள் எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள், கிறிஸ்தவர்கள் , கத்தோலிக்கர்கள் அவர்களுக்கான பிரத்தியேக கல்லறைத் தோட்டங்களில் உடல்களை அடக்கம் செய்வார்கள். இந்நிலையில் மருத்துவர் சைமன் உடலைப் புதைக்க கீழ்பாக்கம் கல்லறைக்கு போன போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் அரசு ஊழியர்களைத் தாக்கினர். ஆம்புலன்ஸை உடைத்தனர். இச் சம்பவம் அகில இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய மருத்துவக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது. கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஒடிசா அரசு அறிவித்தது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தைத் தடுப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் படுவார்கள் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்தார். இந்நிலையில் மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்தும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த சென்னை டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் ரோமன் கத்தோலிக்கர். அந்த வகையில் சி.எஸ்.ஐ. கத்தோலிக்கர்கள் இரு மதப்பிரிவினரையுமே புதைக்கும் கல்லறைத்தோட்டம் கீழ்ப் பாக்கத்தில் உள்ளது. ஆனால் அவர் இறந்த போது அவரது மனைவி, பிள்ளைகளுக்கு தெரியாமல் அரசே கொண்டு போய் வேலங்காடு மயானத்தில் புதைத்து விட்டது. இது அவசரச் சூழல் கருதி செய்யப்பட்டது என்றாலும் கூட அவர்களது குடும்பத்தினரை கலந்தாலோசிக் காமல் செய்தது தவறு. தற்போது கரோனா தொற்று சந்தேகத்தில் வீட்டில் தனிமையில் இருக்கும் மருத்துவர் சைமனின் மனைவி வீட்டிலிருந்தபடி காணொலி மூலம் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.அதாவது தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை தங்கள் சமூகக் கல்லறையில் புதைக்க உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

அந்தக் காணொலிப் பேச்சின் சாராம்சம்:

“முதல்வருக்கு பணிவான வேண்டுகோள். என் கணவர் மருத்துவர் சைமன் கடந்த 19-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய அருட்தந்தை அனுமதி அளித்தார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டார்.

என் கணவர் சிகிச்சையில் இருக்கும்போது அவர் வென்டிலேட்டர் சுவாசக்கருவிக்குச் செல்லும் முன் என்னுடனும் என் பிள்ளைகளுடனும் பேசும்போது, ‘ஒருவேளை நான் திரும்பி வரவில்லை என்றால் நம் வழக்கப்படி அடக்கம் பண்ணுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

முதல்வர் கொரோனா நோய்த் தடுப்பை நல்லமுறையில் கையாளுகிறார். அதனால் தமிழகத்தில் மட்டும்தான் உயிரிழப்பு குறைந்துள்ளது. என் கணவரை சீல்டு செய்யப்பட்ட சவப்பெட்டியில் வேலங்காடு இடுகாட்டில் புதைத்துள்ளோம். அதை அப்படியே எடுத்து எங்கள் வழக்கப்படி எங்கள் இடுகாட்டில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். இதனால் யாருக்கும் எவ்விதத் தொற்றும் பரவாது.

2 பிள்ளைகளுடன் விதவையாக நிற்கிறேன் முதல்வர் ஐயா. கண்ணீருடன் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவச் சேவையில் உயிரிழந்த என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வையுங்கள்”. என்று கண்ணீர் வழிய மருத்துவர் சைமனின் மனைவி முதல்வருக்கு க்கோரிக்கை வைத்துள்ளார்

error: Content is protected !!