32°C
விளம்பரம்
Advertisement

அன்னபூரணி கதை எழுத தொடங்கியபோதே இதில் நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று முடிவு- டைரக்டர் நிகிலேஷ் கிருஷ்ணா!

admin Published: November 24, 2023 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


டிகை நயன்தாரா திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்துவமே அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் ‘அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த ‘அன்னபூரணி’ படம் பற்றி படத்தின் இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணாவிடம் பேச்சுக் கொடுத்த போது, “என்னுடைய சொந்த ஊர் நாமக்கல், நான் ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படங்களில்அசிஸ்டென் டைரக்டராக ஒர்க் பண்ணினேன்.. பிறகு டைரக்டர் ஷங்கர் சாரிடம் ‘எந்திரன் 2.0’ படத்திலும், ‘இந்தியன் 2’ படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளிலும் பணியாற்றியிருக்கிறேன். இது என் முதல் படம். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமண குடும்பத்து பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது லட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளை கடந்து வருகிறார், என்பது தான் ‘அன்னபூரணி’ படத்தின் கதை. ஒரு பக்கம் நவீன சமையற்கலைக்கு ஆசைப்படும் சைவப் பெண்ணின் கதை சொல்லப் பட்டாலும் இதில் இன்னொரு பக்கம் தந்தை மகள் எமோஷனும் உண்டு . படத்தில் மீண்டும் ஜெய் , நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் இருப்பதால் இதற்கும் ராஜா ராணிக்கும் சம்மந்தம் இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் ஒற்றுமை தெரியலாம். . ஜெய் , நயன்தாரா நட்பே இதில் பிரதானம் . எனக்குத் தெரிந்து அசைவம் சமைக்கிற – ஆனால் அசைவம் சாப்பிடாத சமையற்கலை நிபுணர்கள் உண்டு. அவர்களிடம் எல்லாம் கலந்து பேசி , இந்தக் கதைக்கு பலம் சேர்த்தோம்.

கொஞ்சம் டீடெய்லா சொல்வதானால் இந்த படத்தின் கதையை நான் 2019 ஆம் ஆண்டே எழுத ஆரம்பித்து விட்டேன். ஒரு நாள் என் ஃப்ரண்டுடன் ஹோட்டலில் சாப்பிட்ட போது உணவு தொடர்பாக அவருக்கும் அங்கிருந்த மாஸ்டருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது நாங்கள் கதை விவாதத்தில் இருந்தபோது, சமையல் கலை நிபுணர் என்பதை யாரும் பெரிதாக பார்ப்பதில்லை, ஏன் இதை வைத்தே ஒரு கதை எழுதக்கூடாது என்று தோன்றியது. ஆனா நான் இந்த கதை எழுதும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகள் பிரபலமடையவில்லை. அதுமட்டும் அல்ல, இந்த சமையல் கலை பற்றிய பல விஷயங்கள் மற்றும் புரிதல் பலருக்கு இல்லை. அதேபோல், இந்த துறையில் ஆண்கள் ஆதிக்கம் தான் அதிகம், அதில் ஒரு பெண் சாதிக்க நினைத்தால் எப்படி இருக்கும், என்று யோசித்து தான் இந்த கதையை எழுதினேன்.

இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியபோது அதில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அவருக்காகவே இந்த கதையை நான் எழுதினேன். கொரோனா காலக்கட்டத்தின் போது தான் தொலைபேசியில் அவருக்கு இந்த கதையை கூறினேன். முதல் முறையாக 45 நிமிடங்கள் தொலைபேசியில் கதை கேட்டதுமே அவருக்கு பிடித்து விட்டது. குறிப்பாக, அவர் நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் அனைத்துமே திகில், த்ரில்லர், ஆக்‌ஷன் ஜானர் படங்களாகவே இருந்தது. அந்த தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால், இந்த கதையை கேட்டதும் அவருக்கு பிடித்து விட்டது. கதை கேட்ட முதல் நாளில் இருந்து அவர் கதையோடு ஒன்றிவிட்டார். மேலும், நாம் என்ன சொல்லப்போகிறோம், அதை எப்படி சொல்லப் போகிறோம் என்ற விஷயமும் அவருக்கு பிடித்திருந்தது.

இதனிடையே தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளின் தாக்கம் எந்த இடத்திலும் வந்துவிட கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தேன். அதே சமயம், முன்னடியே சொன்னது போல் சமையல் கலை நிபுணர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரை சந்தித்து நான் சில ஆலோசனைகள் கேட்கவும் செய்தேன். அதே சமயம், மக்களுக்கு தெரிந்தது ஒரு சில சமையல் கலைஞர்கள் தான், ஆனால் தெரியாவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களை பற்றி படத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி புட் ஸ்டைலிஷ்ட் என்று சொல்லக்கூடிய உணவு ஒப்பனையாளர் என்ற ஒரு துறை இருக்கிறது. நாம் டிவியில் பார்க்கும் உணவு பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பர படங்களின் பின்னணியிலும் புட் ஸ்டைலிஷ்ட் என்பவர் இருக்கிறார், அவர்கள் மூலம் தான் அந்த விளம்பரங்கள் ரசிகர்களை கவரக்கூடியதாக உருவாகிறது. அப்படி ஒருவர் பற்றி பலருக்கு தெரியாது, அதுபோன்ற கதாபாத்திரங்களை படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இப்படி சொன்னாலும் இந்த படம் உணவு பற்றிய படம் அல்ல, அப்பா – மகள் இடையே இருக்கும் உறவை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் கதை. அதில் ஒரு பெண் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிப்பதை சொல்லியிருக்கிறேன். இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் லைவாக இருக்கும். யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம். இதில் ஜெய் நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது லட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராக பார்க்க வேண்டும் என்பது தான் லட்சியம். இந்த படத்திற்கு அவரை சிபாரிசு செய்தது நயன்தாரா தான்.

இந்த கதையை ஜெயிடம் சொன்ன போது, அவர் முழுவதுமாக கேட்டுவிட்டு, ஒரு சிறந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதனால் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ஜெய் மற்றும் நயன்தாரா இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது, மீண்டும் ஜெய் , நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் இருப்பதால் இதற்கும் ராஜா ராணிக்கும் சம்மந்தம் இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் ஒற்றுமை தெரியலாம். . ஜெய் , நயன்தாரா நட்பே இதில் பிரதானம் . ” என்றார்.

நயன்தாரா மற்றும் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அருள் சக்தி முருகன் வசனம் எழுத, பிரசாந்த்.எஸ் கூடுதல் திரைக்கதை அமைத்துள்ளார்.

உடனடி செய்திகள்