நாடு முழுக்க 24 போலி பல்கலைக்கழகங்கள்! – மோடி அரசு தகவல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன.இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்படைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின் அடிப்படையில், நாடு முழுதும் 24 போலி பல்கலை கழகங்கள் இயங்கி வருவது யு.ஜி.சி. எனப்படும் பல்கலை கழக மானியக்குழுவால் கண்டறியப்பட்டு உள்ளது.
யு.ஜி.சி.யின் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் 2 பல்கலை கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதுதவிர, உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பல்கலைக்கழகங்கள், டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 2 பல்கலைக்கழகங்கள், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 24 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த போலி பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதிலில் தெரிவித்து உள்ளார்.