நீட் தேர்வும் மத்திய அரசின் பிடிவாதமும் – அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன?

நீட் தேர்வும் மத்திய அரசின் பிடிவாதமும் – அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன?

நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (8-1-2022) சென்னை-9, தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலில், கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பின்வருமாறு உரையாற்றினார்:

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது தமிழ்நாட்டின் பிரச்சினை – தமிழக மாணவர்களின் பிரச்சினை – ஆகவே இதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற கருத்துருவாக்கம் மிகவும் தேவைப்படுகிறது. கல்வி நீரோடையானது அனைவருக்கும் பொதுவானது. அதனால் பயன்பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

இந்தியா போன்ற ஏழை எளிய விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில் – வறுமை சூழ்ந்த நாட்டில் – சாதியின் பெயரால் சமத்துவமற்ற தன்மை இருக்கும் நாட்டில் இத்தகைய கல்வியை அனைவரும் அடைவது என்பதே மிகப்பெரிய, சிரமமான காரியமாக இருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அந்த ரத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது – ஏன் உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது என்பதை இந்தக் கூட்டத்தில், இந்த மன்றத்தில் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிப் பெற்ற அந்த கல்வி உரிமையை இந்த நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை நாம் அனைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

அதனால்தான் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் – முதலில் இந்தியப் பிரதமர் அவர்களை 17.6.2021 அன்று நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்டமுன்வடிவை 13.9.2021 அன்று நம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அப்படி நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அந்த சட்டமுன்வடிவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் மாநில ஆளுநர் அவர்கள்.

ஒரு சட்டமன்றம் – தனக்கு இருக்கும் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் கீழ் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, அதை ஆளுநர் அவர்கள் மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சியின் தத்துவம். ஆகவே, நான் நேரில் சென்று ஆளுநர் அவர்களை வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை. மாநில உரிமையும் – சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாக்கப்படும் சூழ்நிலை உருவானதால்தான் – அவசரமாக அவசியத்துடன் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறோம். இங்கே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் – ஒரு வரைவு தீர்மானத்தை உங்களிடத்தில் எடுத்துரைப்பார்கள்.

நம் அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் காப்பாற்றிட வேண்டும் என்பதுதான். ஆகவே இந்த வரைவுத் தீர்மானத்தின் மீது தங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்

இதை அடுத்து தமிழக முதல்வர் குறிப்பிட்டபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வரைவுத் தீர்மானத்தை வெளியிட்டு விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உரையாற்றிய திருமதி வானதி சீனிவாசன் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றிட உடன்பாடில்லை என்று தங்களது கட்சியின் சார்பில் தெரிவித்து, கூட்டத்திலிருந்து சென்றார்.

பின்னர், தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவத் துறையில் தமிழ்நாடு இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது. ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு திருத்தச் சட்டம் மற்றும் அதன்பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்நிறுத்தி நமது மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது. மாநில அரசு நிதியிலிருந்து- மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது, இதுபோன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக்கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிப் பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வை மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி- அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது.

ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டிடவும், நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு- மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த சட்டமுன்வடிவினை குடியரசு தலைவருக்கு மாநில ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது.

தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி மாண்புமிகு முதல்வர் அவர்களே நேரில் சென்று ஆளுநரைச் சந்தித்து நீட் சட்டமுன்வடிவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்கள்.

மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நேரத்தில்- அவரை சந்திக்க இயலவில்லை என்பதால்- மனுவினை அவரது அலுவலகத்தில் அளித்து- அன்று மாலையே அம்மனுவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மேலும் வலியுறுத்திட- ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களைச் சந்திக்க நேரம்கோரி- பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால்- அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து- இன்றைக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்து கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

நாமும் நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் – ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்த பின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. என்ற தீர்மானம் அறிவிக்கப்பட்டு அது ஒப்புக் கொள்ளப்பட்டது, பின்னர், நீர்வளத் துறை அமைச்சர்  துரைமுருகன் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் குறித்தும் அங்கு நிறைவேறிய தீர்மானம் குறித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

error: Content is protected !!