பார்வையற்ற பெண் முதல் ஐ.ஏ.எஸ் பிரஞ்சல் பாட்டீல் சப்- கலெக்டரானார்!- வீடியோ!

பார்வையற்ற பெண் முதல் ஐ.ஏ.எஸ் பிரஞ்சல் பாட்டீல் சப்- கலெக்டரானார்!- வீடியோ!

மகாராஷ்டிரா -வின் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிரஞ்சால் பட்டில். 6 வயதில் சூரியனை தொடர்ந்து உற்று நோக்கியதால் கண் பார்வையை இழந்த இவர், தன்னம்பிக்கையை இழக்காமல் பள்ளி கல்வியை படித்து முடித்தார். பின்னர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்று, சர்வதேச உறவுகள் தொடர்பான தனிப் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 2016-ம் ஆண்டில் 26 வயதானபோது ஐ.ஏ.எஸ். எனப்படும் இந்திய ஆட்சி பணி தொடர்பான பட்டம்பெற விரும்பிய பிரஞ்சால் பட்டில், அதற்குரிய பாடங்களை வாசித்து காட்டும் மென் பொருளின் உதவியுடன் கற்று, 2017-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேசிய அளவிலான தரப்பட்டியலில் 124-வது இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி என்ற சிறப்பை பெற்ற பிரஞ்சால் பட்டில், முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய நிர்வாக இயல் கழகத்தில் பயிற்சி பெற்று அதே ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணியாற்றினார். இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் திருவனந்தபுரம் மாவட்ட துணை கலெக்டராக பிரஞ்சால் பட்டில்(31) இன்று பதவியேற்றார்.

https://www.facebook.com/AanthaiReporter/videos/462369807708976/

ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு ஊடகங்களிடம் அவர்,”நாம் ஒருபோதும் தோற்கடிக்கப்படக் கூடாது, நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது. நாம் எப்போதும் நமது முயற்சிகளால், எதை விரும்புகிறோமோ அதை அடைய முடியும். நான் சிறுவயதிலேயே பார்வையை இழந்தபோதிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு இந்த வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன். நான் பணியாற்றத் தொடங்கிய பிறகுதான் மாவட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும், அதற்காக சிறப்பாகத் திட்டமிடுவேன். எனது சக ஊழியர்கள் மற்றும் திருவனந்தபுரம் மக்களிடமிருந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்”என்று பிரஞ்சல் பாட்டீல் தெரிவித்தார்.

இரு கண்களில் பார்வை பறிபோன நிலையிலும் தன்னம்பிக்கையுடன் படித்து இந்த நிலைக்கு முன்னேறியுள்ள பிரஞ்சால் பட்டில், தனது உழைப்பு மற்றும் திறமையால் விரைவில் கலெக்டர் என்ற உயர்நிலையையும் அடைய வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்!

Related Posts

error: Content is protected !!