ஃபைனான்ஸ் & அனலிட்டிக்ஸ்: பட்டதாரி மாணவர்களின் சம்பளத்தை உயர்த்தும் புதியத் திறன்கள்!
நிதி (Finance) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Analytics) துறைகளில் காலடி எடுத்து வைக்கும் புதிய பட்டதாரிகளுக்கு, நடப்பு 2026-ஆம் நிதியாண்டில் ஊதிய விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சந்தையின் தேவைக்கேற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்களுக்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிப்பது பிளேஸ்மென்ட் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ரூ. 23 லட்சம் வரை உயரிய ஊதியம்
2026 நிதியாண்டின் வேலைவாய்ப்பு முகாம்களில், சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சராசரியாக ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், திறமை மிக்க மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 23 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற முன்னணி நிறுவனங்கள், பயிற்சி பெற்ற திறமையாளர்களைக் கண்டறிந்து பணியமர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 160 கோடிக்கும் அதிகமான ஊதியத் தொகுப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தைக்குத் தேவையான பயிற்சிகள்
வெறும் பட்டப்படிப்புடன் நிறுத்திக் கொள்ளாமல், தற்போதைய சந்தை சூழலுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதே இந்த ஊதிய உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக:
-
முதலீட்டு வங்கிச் செயல்பாடுகள் (Investment Banking Operations)
-
நிதிப் பகுப்பாய்வு (Financial Analysis)
-
மெஷின் லேர்னிங் மற்றும் ஜென் ஏஐ (GenAI) உள்ளடக்கிய தரவு அறிவியல் (Data Science)
போன்ற பாடப்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையில் மவுசு அதிகரித்துள்ளது. “சந்தைக்கு உண்மையில் என்ன தேவையோ, அதில் மக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்பதுதான் தற்போதைய வெற்றிகரமான மாடல்” என இமார்டிகஸ் லேர்னிங் (Imarticus Learning) நிறுவனத்தின் சிஇஓ நிகில் பார்ஷிகர் தெரிவித்துள்ளார்.
சார்ட்டட் அக்கவுண்டன்ட்களின் நிலை
புதிதாகத் தகுதி பெற்ற சார்ட்டட் அக்கவுண்டன்ட்களை (CA) பொறுத்தவரை, சிறிய நிறுவனங்களில் ரூ. 6 – 8 லட்சம் வரையிலும், தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த சாதனையாளர்களுக்கு ரூ. 13 – 18 லட்சம் வரையிலும் ஊதியத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, கார்ப்பரேட் நிதி மற்றும் ஆலோசனைப் பிரிவுகளில் இவர்களுக்கான ஊதியம் மற்றும் பொறுப்புகள் பன்மடங்கு உயர்கின்றன.
.‘பிக் ஃபோர்’ (Big Four) நிறுவனங்களின் பங்களிப்பு
ஆடிட்டிங், அட்வைசரி மற்றும் கன்சல்டிங் துறைகளில் முன்னணியில் உள்ள ‘பிக் ஃபோர்’ நிறுவனங்கள், எப்போதும் போலவே தகுதியானவர்களுக்குக் கடுமையான போட்டிக்கு மத்தியில் சிறந்த ஊதியத் தொகுப்புகளை வழங்கி வருகின்றன. டொமைன் நிபுணத்துவம், தலைமைத்துவப் பண்பு மற்றும் வியூக ரீதியான முடிவெடுத்தல் போன்ற திறன்களே நிதித்துறையில் ஒருவரது வருமானத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளன
தச்சை குமார்


