ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்!

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், பிற வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.4 சதவீதம் உயர்த்தியது. அதையடுத்து ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது.
2-வது முறையாக ஜூன் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்ந்து 4.90 சதவீதமாக ஆனது.
ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாக ஆனது. இந்த நிலையில் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரையில் மொத்தமாக 1.4 சதவீத ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “பொதுவாக உலக பொருளாதாரம் பெரும் சிக்கலில் உள்ளது. இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. பணவீக்கம் 7 சதவீகமாக அதிகரித்துள்ளது. ஆண்டின் இரண்டாவது பாதியில் 6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார். மேலும், ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீம் அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
முன்னதாக கடந்த மாதம், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கு முன், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்டில், வட்டி விகிதம் இதே 5.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை விட அதிகமாக உயர்ந்துள்ளது.