மீண்டும் பரவுது நிபா: கேரளாவில்இருவர் பலி – மத்திய அரசு எச்சரிக்கை!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் ’நிபா வைரஸ்’ தொற்று இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிபா வைரஸ் தோற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.
இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ்தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதே கோழிக்கோட்டில் 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் அடைந்த சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகவும் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி சுமார் 17-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.இந்நிலையில் இப்போதும் நடந்துள்ள மரணம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நிபா வைரஸ் பொதுவாக, பழங்களை சாப்பிடக்கூடிய வௌவாலில் இருந்து மற்ற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுகிறது. இதேபோல் பன்றியின் மூலமாகப் பரவுகிறது என்றும் சொல்லப்படுகின்றன. மற்ற விலங்குகளில் இருந்து பரவுவதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.. இந்த நிபா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்படும். உடலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சிலருக்கு, வலிப்பு கூட வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த நிபா வைரஸ் தாக்கினால் அதன் பாதிப்புகள் கிட்டதட்ட 15 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புண்டு. இந்த வைரஸ் தாக்கப்பட்டால், நினைவிழப்பு, மூளைக்காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு, மரணம் வரை கொண்டுபோய் விடும் என அச்சுறுத்தப்படுகிறது. இந்த நிபா வைரஸின் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து 30 சதவீதம் வரை மட்டுமே காப்பாற்றுவதற்கான வழிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது
த்ற்போது நிபா வைரஸ் தொடர்பாக மாநில அரசுக்கு உதவவும், நிலைமையை ஆய்வு செய்யவும் கேரளாவுக்கு மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும் நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..