இந்திய தபால்துறை பணபரிமாற்றத்திற்காக ‘டாக் பே’ (Dak pay) என்ற செயலி!

இந்திய தபால்துறை பணபரிமாற்றத்திற்காக ‘டாக் பே’ (Dak pay) என்ற செயலி!

மத்திய அரசின் ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தபால்துறை மின்னணு பணபரிமாற்றத்திற்காக ‘டாக் பே’ (Dak pay) என்ற செயலியை அறிமுகம் செய்தது.

வணிக பரிமாற்றத்தில் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக கூகுள் பே, பேடிஎம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. அதைத் தொடர்ந்து தற்போது இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி (ஐபிபிபி), சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். கடைகளில் ‘க்யூஆர்’ குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். இதர கட்டணங்களையும் செலுத்தலாம்.

‘டாக் பே’ என்ற இந்த செயலியை மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து பேசிய போது, “ஊரடங்கின் போது, இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும், டிஜிட்டல் மூலமாக பல சேவைகளை வழங்கியது. தற்போது ‘டாக் பே’ தொடங்கப் பட்டுள்ளதன் மூலம், தபால் துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது.

இந்த புதுமையான சேவை, வங்கி சேவைகளை மட்டும் அல்ல, ஆன்லைன் தபால் சேவை களையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் வீட்டிலிருந்து தபால் சேவைகளை ஆர்டர் செய்ய முடியும், நிதி சேவைகளையும் பெற முடியும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல், வீட்டிலேயே தபால் நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் பெறமுடியும். இந்த சேவைகள் மூலம், பிரதமரின் தொலைநோக்கான நிதி உள்ளடக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறியுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்திய தபால் துறை வங்கி வாரிய தலைவர் பிரதீபா குமார் பிசாய் கூறுகையில், ‘‘டாக் பே செயலி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தம் முறைக்கு எளிதான தீர்வை வழங்குகிறது. செயலி மூலம் அல்லது நம்பிக்கைக்குரிய தபால்காரரின் உதவி மூலமும் வங்கி சேவைகளை பெற முடியும். ஒவ்வொரு இந்தியரின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான, உண்மையான இந்திய தீர்வாக ‘டாக் பே’ உள்ளது’’ என பிரதீபா குமார் சொன்னார்

error: Content is protected !!