நானும் தமிழந்தான்யா – முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்!

நானும் தமிழந்தான்யா – முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கையின் விளையாட்டு சாதனை வரலாற்றை படமாக 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், ராஜபக்சேவின் இன்னொரு முகம் எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடங்கி ஏகப்பட்ட விஐபி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்க அறிக்கையில், “இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

70கள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். என் 7 வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். எனவே போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்குத் தெரியும். 30 வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியில் தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது.

நான் ஒருபோதும் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் மாட்டேன். எனது பள்ளி காலம் முதல் நான் தமிழ்வழியில் படித்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறாகும். ஒரு மலையக தமிழனாக நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். ஐநாவில் உணவு தூதராக இருந்த போது 2002ல் LTTE கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகள் வரை மக்கள் அறிவர்.

போர் முடிவுற்ற பின்னர் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான Foundation of Goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம். நான் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்திலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது. எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்

அந்த அறிக்கை முழு விபரம் இதோ

error: Content is protected !!