“நடிகர்களுக்கு வேட்டியே கட்ட தெரியவில்லை” ; மன்னர் வகையறா இசை வெளியீட்டு விழாவில் பூபதி பாண்டியன்..!

A 3 V சினிமாஸ் சார்பில் நடிகர் விமல் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘மன்னர் வகையறா’. .தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
மேலும், ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், ‘இளைய திலகம் பிரபு’, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம் புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இருவரும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர்செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் விக்ரமன், “திடீரென ஏற்பாடு செய்த இந்த விழாவுக்கு வந்ததற்கு விமல் நன்றி சொன்னார். ஆனால் நான் ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை இயக்கியபோது அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க விமலை அணுகினேன்.. அதற்கு முன் அவருடன் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் நான் கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டார். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்க மாட்டேன்.
இயக்குநர் பூபதி பாண்டியன் கலாய்ப்பதில் வல்லவர்.. அவர்தான் என் படங்களை முதன்முதலில் கலாய்த்தவர். ‘தேவதையை கண்டேன்’ படத்தில் ‘சூர்ய வம்சம்’ படத்தை கலாய்த்தவர், இதில் எந்தப் படத்தை கலாய்த்திருக்கிறாரோ தெரியவில்லை…” என வாழ்த்தி பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்த விழாவுக்கு வந்தது நடிகர் விமலுக்காக அல்ல.. தயாரிப்பாளர் விமலுக்காகத்தான். பாக்யராஜூக்கு பிறகு சிறந்த திரைக்கதை எழுதுபவர் என்றால் அது பூபதி பாண்டியன்தான். ஆனால் இன்று இவர்கள் இருவரையும் மிஞ்சும் வகையில் அரசியல்வாதிகள் திரைக்கதை எழுதுகின்றனர். நாம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். விமலின் இழப்புகளுக்கு ஈடாக இந்தப் படம் லாபம் சம்பாதித்து கொடுக்கும் என்பது உறுதி…” என்றார்.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரோபோ சங்கர் பேசும்போது, “சில படங்களில் நடிக்கும்போதே தெரிந்துவிடும் அது நிச்சயம் ஹிட்டாகும் என்று. அது இந்தப் படத்திலும் தெரிந்தது. ‘மாரி’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படங்களைபோல இந்த ‘மன்னர் வகையறா’வும் காமெடியில் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் வடிவேலுக்கு எப்படி ‘வின்னர்’ அமைந்ததோ அப்படி எனக்கு இந்தப் படம் இருக்கும்..” என்றார்.
கதாநாயகி ஆனந்தி பேசும்போது, “இந்தப் படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். பூபதி பாண்டியன் சாரிடம், ‘நான் உங்ககிட்ட கொஞ்ச நாள் உதவி இயக்குநரா வேலை பார்க்கிறேன்’ என்றுகூட வாய்ப்பு கேட்டேன். அந்த அளவுக்கு அவரின் காமெடி டைமிங் சென்ஸ் பார்த்து பிரமித்துப் போனேன்…” என்றார்.
இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய் பேசும்போது, “துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு வேறு ஜானரில் இசையமைத்துள்ளேன். இதில் பூபதி பாண்டியன் எழுதிய ‘உங்க அண்ணனை பத்தியும் கவலை இல்லை’ பாடலும், அதற்கு அமைந்துள்ள துள்ளலான இசையும், இந்த இசைக்கேற்ப விமல் – ஆனந்தி ஆடியிருக்கும் நடனத்தையும் பார்க்கும்போது நிச்சயம் இந்தப் பாடல் இளைஞர்களின் மனதில் இடம் பிடிக்கும் என்பது உறுதி…” என்றார்.
இயக்குநர் பூபதி பாண்டியன் பேசும்போது, “முதலில் இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதன் ஸார்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார். அதன் பின்புதான் விமல் இந்தப் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார்.
எனக்கு ஒரு ராசி இருக்கிறது. என் இயக்கத்தில்ல் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்த வகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத் தயாரிப்பில் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
இந்தப் படத்தின் ஷூட்டிங்ஸ் பாட்டுல ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம்.
ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசாமல் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததைவிட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், ‘தெனாலி’ கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது நான்தான் உதவியாளராக சேர்த்துவிட்டேன். இன்று என் படத்துக்கு எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப் பின் இடம் பெற்றுள்ள சரண்யா – நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்…” என்றார்.
தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் பேசியபோது, “இந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது அந்த சமயத்தில் வெளியான விமலின் படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. ஆனாலும் கதையின் மீது இயக்குநர் பூபதி பாண்டியன் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொதுவாக விமலின் படங்களுக்கு ஆகும் பட்ஜெட்டைப்போல மூன்று மடங்கு இதற்கு செலவழித்துளோம்.
ஆனால் இந்த நிமிடம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தின் வியாபாரம் முடிந்து நாங்கள் படத்திற்காக செலவழித்த பணம் திரும்பி வந்துவிட்டது. இதுவே ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி.
விஷால் நடித்த ‘மலைக்கோட்டை’ படத்தையே 7௦ நாட்களில் எடுத்தார் பூபதி பாண்டியன். ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 83 நாட்கள் நடந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 18 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கியுள்ளோம். அந்த அளவுக்கு படத்தில் பெர்பெக்சன் பார்த்துள்ளோம்.
செலவு கூடுகிறதே என வருத்தப்பட்டபோது, தனது சம்பளத்தில் பாதியை விட்டுக் கொடுத்தார் இயக்குநர் பூபதி பாண்டியன். நிச்சயம் இந்தப் படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
விமல் இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப் படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண் போகாது. 2018-ல் அவர் நடிப்பில் 6 படங்கள் தயாராக இருக்கின்றன. ஜனவரி-17-ல் ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணியின் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.
பொங்கல் பண்டிகையில் இந்தப் படம் ரிலீசாவது உறுதி. நிறைய படங்கள் வருகின்றதே என சிலர் கேட்டார்கள்.. இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும் சரி.. பொங்கலுக்கு மன்னர் வகையறா திரைப்படம் ரிலீசாவது உறுதி…” என்றார் சிங்காரவேலன்.