செய்தியைக் கேட்க / Listen to News
மனித உடலும் மனமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத அளவுக்கு நுணுக்கமான தொடர்புடையவை. நாம் நாள்தோறும் சந்திக்கும் மன அழுத்தம் என்பது வெறும் எண்ணங்கள் அல்லது உணர்வுகள் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல; அது நமது உடலின் உள் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் ஒரு சக்திவாய்ந்த உயிரியல் நிகழ்வாகும். மூளையில் தோன்றும் ஒரு சிறிய பயமோ அல்லது கவலையோ, எவ்வாறு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சென்றடைகிறது, அங்கு அது என்ன மாதிரியான ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிய அறிவியல் பூர்வமான உண்மைகள் மிகவும் வியப்பளிப்பவை.
நமது மூளையில் மன அழுத்தம் அல்லது ஆபத்து உணர்வு தோன்றும் நொடியில், அங்கிருக்கும் அமிக்டாலா என்ற பகுதி அதை உணர்ந்து உடனடியாக அபாயச் சிக்னலை அனுப்புகிறது. இததைத் தொடர்ந்து, மூளையின் ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் சிறுநீரகத்தின் மேல் உள்ள அட்ரினல் சுரப்பி ஆகிய மூன்றும் இணைந்து எச்பிஏ அச்சு எனும் அமைப்பாக இயங்கத் தொடங்குகின்றன. இந்த அமைப்பு உடனடியாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஆகிய மன அழுத்த ஹார்மோன்களை அதிக அளவில் ரத்தத்தில் செலுத்துகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து மனிதன் தப்பிப்பதற்காக உடலைத் தயார்படுத்தும் இந்த இயல்பான தற்காப்பு முறை, நீடித்த அல்லது தொடர்ச்சியான மன அழுத்தத்தின் போது உடலுக்கே ஆபத்தாக மாறுகிறது.

ரத்த ஓட்டத்தில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு நீண்ட காலம் அதிகமாகவே இருக்கும்போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாட்டை மெல்ல மெல்ல முடக்குகிறது. குறிப்பாக, உடலுக்கு வரும் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் டி-செல்கள் மற்றும் பி-செல்கள் ஆகியவற்றின் உற்பத்தி பெருமளவில் குறைகிறது. அதேபோல், இயல்பாக உடலைப் பாதுகாக்கும் இயற்கை கொலையாளி செல்கள் எனப்படும் நேச்சுரல் கில்லர் செல்கள், நோய் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கும் திறனை இழக்கின்றன. இதன் காரணமாக, உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு அரண் பலவீனமடைந்து, லேசான காய்ச்சல் முதல் கடுமையான தொற்று நோய்கள் வரை உடல் எளிதில் நோய்களுக்கு இரையாகிறது.
இதையும் தாண்டி, நரம்பு மண்டலமும் நோய் எதிர்ப்புச் செல்களும் நேரடியாகவே பிணைக்கப்பட்டுள்ளன. மூளையிலிருந்து செல்லும் பரிவு நரம்பு மண்டலத்தின் நரம்பு முனைகள், நமது எலும்பு மஜ்ஜை, மண்ணீரல் மற்றும் நிணநீர் கணுக்கள் போன்ற நோய் எதிர்ப்புச் செல்கள் உருவாகும் முக்கியமான இடங்களில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. மன அழுத்தத்தின் போது இந்த நரம்புகள் நோர்பினெப்ரின் என்ற ரசாயனத்தை வெளியாக்குகின்றன. இந்த ரசாயனம் நோய் எதிர்ப்புச் செல்களில் உள்ள ஏற்பிகளுடன் இணைந்து, அவற்றிடையே இருக்கும் இயல்பான தகவல்தொடர்பைச் சீர்குலைக்கிறது. இதனால் செல்கள் தங்களுக்குள் சரியான சிக்னல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பெரும் குழப்பமடைகின்றன.
இவ்வாறு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் போது, நோய் எதிர்ப்புச் செல்கள் சைட்டோகைன்கள் என்ற அழற்சி உருவாக்கும் புரதங்களை அளவுக்கு அதிகமாகச் சுரக்கத் தொடங்குகின்றன. இது உடலுக்குள் ஒருவித தீராத வீக்க நிலையை உருவாக்குகிறது. இந்த நாள்பட்ட உள்முக வீக்க நிலைதான் பின்னாளில் இதய நோய்கள், நீரிழிவு, மூட்டு வலி மற்றும் பல்வேறு சுயநிர்பந்த நோய் எதிர்ப்பு அமைப்புக் குறைபாடுகளுக்கு முதன்மை காரணியாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால், மன அழுத்தம் என்பது மூளையில் தொடங்கும் ஒரு சிந்தனை அலை; ஆனால் அது உடலின் நோய் எதிர்ப்பு அரணை உடைத்து ஒட்டுமொத்த உடல் நலனையும் சீர்குலைக்கும் வல்லமை கொண்டது.
டாக்டர் செந்தில் வசந்த்
