பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து .. 4 பேர் பலி;- வீடியோ!

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து .. 4 பேர் பலி;- வீடியோ!

பீகாரில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு நேரிட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 60க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லியின் ஆனந்த்பீகார் ரயில் நிலையத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி கிளம்பிய வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் பக்ஸர் அருகே வந்த போது விபத்து நேரிட்டது. ரகுநாத்ப்பூர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் நடந்த இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்தன. பெரும் சத்தத்துடன் நடந்த விபத்தால் மற்ற பெட்டிகளும் குலுங்கிய நிலையில், பயணிகள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். சக பயணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து பயணிகளும், பொதுமக்களும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவினர்.விபத்து காரணமாக 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 21 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக தெரிவித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே விபத்து தொடர்பாக 97714 49971, 89056 97493, 83061 80542, 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பீகார் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!