பீகாரில் மறுபடியும் மது விலக்கு! – இன்று முதல் அமலாவதாக சி .எம். அறிவிப்பு

பீகாரில் மறுபடியும் மது விலக்கு! – இன்று முதல் அமலாவதாக சி .எம். அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலில் இருந்த பூரண மது விலக்கு சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. பூரண மது விலக்கு அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானது என்று பாட்னா கோர்ட் கூறி இருந்தது. இந்த நிலையில் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த பீகார் அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் இன்று முதல் பூரண மது விலக்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு. கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட புதிய மது விலக்கு சட்டம் அமலுக்கு வருவதாகவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.

bihar oct 2

மதுவிலக்கு தொடர்பாக நிதிஷ்குமார் கூறுகையில், ”மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், மக்கள் முன்பு போல் மதுவுக்கு பணத்தை செலவழிக்கவில்லை. நல்ல செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. புதிய சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் தடையானது கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட சட்டம் தொடர்பானது. இந்த புதிய சட்டம் அமல்படுத்த அரசிதழில் வெளியிட தேவையில்லை.

இன்று முதல் அமல்படுத்துவதற்கு மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐகோர்ட் தடை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஐகோர்ட்டின் 150 பக்க உத்தரவு நகலை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும். மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்த சட்டம் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்துதல் சமூக குற்றம்தான்” எனக்கூறினார்.

பீகார் அரசு புதிய கலால் சட்டத்தில், மேலும் சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி, மது விற்பனை செய்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் விதிக்கப்படும் அபராதம் மற்றும் சிறை தண்டனை காலம், கடுமையாக உயர்த்தப்பட்டது.மேலும், ‘வீட்டில் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டால், அந்த வீட்டில் உள்ள வயதுக்கு வந்த ஆண்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவர்’ என்றும் கூறப்பட்டது.இந்த சட்டத் திருத்தங்களுக்கு, பீஹார் சட்டசபை மற்றும் மேலவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது; கவர்னர் ராம்நாத் கோவிந்தும் அனுமதி அளித்தார். ‘இந்த விதிகள், காந்தி ஜெயந்தியான, அக்., 2 முதல் அமலுக்கு வரும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது.