ரயில் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் ஸ்கீம் ரெடி! பிரீமியம் ஜஸ்ட் 92 காசுகள் மட்டுமே!
ரயில் பயணத்தின் போது விபத்தில் உயிரிழக்க நேரிடும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் திட்டம் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணச்சீட்டு எடுக்கும் போது 92 காசுகள் பிரீமியம் மூலம் ரூ.10 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. இந்த புதிய இன்சூரன்ஸ் திட்டம் வரும் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புறநகர் ரயில்கள் தவிர மற்ற அனைத்து ரயில்களுக்கும் இணையதளம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டம் பொருந்தும். அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் இழப்பீட்டு தொகை கிடைக்க வகை செய்யப்பட்டிருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. அதே சமயம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமின்றி ஆர்ஏசி, காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
அதாவது ரயில் பயணத்தின்போது விபத்து ஏற்பட்டாலோ, பயங்கரவாத தாக்குதல், கொள்ளை, தீவைப்பு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ இழப்பீடு பெற முடியும். உயிரிழப்பு நேரிட்டாலோ, முழு ஊனம் அடைந்தாலோ ரூ.10 லட்சமும், பகுதி அளவில் ஊனம் அடைந்தால் ரூ.7.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். காயம் அடைவோருக்கு ரூ.2 லட்சம் வரை மருத்துவமனை கட்டணம், விபத்தில் இறந்தவரின் உடலை அனுப்பி வைக்க ரூ.10 ஆயிரம் என இழப்பீடு வழங்கப்படும்.
பயணச்சீட்டு முன்பதிவை ரத்து செய்தால் பிரிமிய கட்டணத்தை திரும்பப் பெறமுடியாது என்றும் ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ், ராம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐஆர்சிடிசி இத்திட்டத்தை செயல்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


