பர்கர் சாப்பிட்டா நீரிழிவு மட்டுமில்லே.. கேன்சரும் வரும்!
அந்நிய நாடுகளின் துரித உணவுகளான பீட்சாவும், பர்கரும் நம் நாட்டிலும் இன்றைய பெரும்பாலானோருக்கு தினசரி உணவாகிப் போய்விட்டது. ஆனால் இந்த வகையான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளதாக ஓர் ஆய்வு ஒன்று தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் நடத்திய உணவினைப் பற்றிய் அந்த ஆய்வில் அமெரிக்க உணவுப் பழக்கங்களை மூன்று நாட்கள் தொடர்ந்து கடைபிடித்தாலே நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக மாபெரும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருந்தது. இந்த ஆய்வுக்காகச் சிறப்பான உடல் நலம் கொண்ட 6 ஆண்களை ஒரு வாரத்துக்கு, 50 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 35 சதவிகிதம் கொழுப்பு மற்றும் 15 சதவிகிதம் புரதம் போன்றவற்றுடன் சேர்ந்த உணவு வகைகளை, ஒரு நாளில் 6 ஆயிரம் கலோரிகளுக்கு கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவர்களை உடற்பயிற்சி ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறியிருந்தனர். இந்த ஆண்கள் குறிப்பிடப்பட்ட அளவு கலோரிகள் கொண்ட உணவுக்காக அமெரிக்க உணவுகளான பீட்சா, பர்கர் போன்றவற்றை அன்றாட உண வாக எடுத்துக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டதால் உடலின் குளுகோஸை செல்கள் உறிஞ்சாமல், இவை நேரடியாக ரத்தத்தில் கலப்பது உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைந்தது. இத்தனை வேகமாக நீரிழிவு நோய் ஏற்பட்டது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தந்தது. இந்த மாற்றம், மூன்றே நாட்களில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் : புகைபிடித்தல் உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற காலம் போய், பதப்படுத்தப் பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளாலும் புற்றுநோய் தற்போது பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசரகதி கொண்டதாக மாறியுள்ளது. இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணும் காலத்தில் நாம் உள்ளோம். பதப் படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின் புகலிடமாக உள்ளது. பதப்படுத்தப் பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது. பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரிட்டனில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


