+2-க்கு பிறகு…? மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டி!

+2-க்கு பிறகு…? மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டி!

தமிழகத்தில் +2 தேர்வுகள் முடிவடைந்து, மாணவர்கள் அடுத்தகட்டப் பயணத்திற்குத் தயாராகி வருகின்றனர். மதிப்பெண்கள் வருவதற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டிய உயர்கல்வி வாய்ப்புகள் ஒருபுறம், ரிசல்ட் வந்த பிறகு சேர வேண்டிய படிப்புகள் மறுபுறம் எனப் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த முக்கியமான படிப்புகள் எவை? எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? இதோ ஒரு விரிவான அலசல்.

ரிசல்ட் வரும் முன் விண்ணப்பிக்க வேண்டிய நுழைவுத் தேர்வுகள்:

பல தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு முன்னரே விண்ணப்பங்களை வரவேற்கின்றன. அவற்றில் முக்கியமானவை:

  • ஹோட்டல் மேனேஜ்மென்ட் & டூரிசம்: NCHM-JEE மற்றும் IITTM தேர்வுகள் மூலம் பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பி.பி.ஏ டூரிசம் படிப்புகளில் சேரலாம். இதற்கு அனைத்து குரூப் மாணவர்களும் தகுதியானவர்கள்.

  • அறிவியல் மற்றும் ஆராய்ச்சி: விஞ்ஞானி ஆக விரும்பும் மாணவர்களுக்கு NISER (NEST) மற்றும் IISER (IAT) சிறந்த தேர்வுகள். இதில் குறைந்த அளவிலான இடங்களே உள்ளதால் கடும் போட்டி இருக்கும்.

  • மேலாண்மைப் படிப்புகள் (MBA): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்பிஏ படிப்பிற்கு IPMAT மற்றும் JIPMAT தேர்வுகள் வழிவகுக்கின்றன. இதற்கு கிளாட் (CLAT) ஸ்கோரும் சில இடங்களில் கணக்கில் கொள்ளப்படும்.

  • தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை: பிட்சாட் (BITSAT), ஆர்க்கிடெக்சர் படிப்பிற்கான நாட்டா (NATA), மற்றும் கடல்சார் படிப்புகளுக்கான IMU-CET ஆகிய தேர்வுகளுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடைசி தேதிகள் உள்ளன.

ரிசல்ட் வந்த பின் விண்ணப்பிக்க வேண்டிய படிப்புகள்:

தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையைத் தொடங்கும்.

  • பொறியியல் சேர்க்கை (TNEA): பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் 7.5% அரசுப் பள்ளி உள்ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 14,500 இடங்கள் இலவசமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

  • விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம்: TNAU மூலம் விவசாயப் படிப்புகளுக்கும், TANUVAS மூலம் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். வேளாண் படிப்புகளில் சுமார் 350 இலவச இடங்கள் உள்ளன.

  • கலை மற்றும் அறிவியல்: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (TNGASA) சேர ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம். இதில் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.

  • சட்டம் மற்றும் டிப்ளமோ: டிஎன்டாலு (TNDALU) மூலம் 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கும், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கும் ரிசல்ட் வந்த பிறகு விண்ணப்பிக்கலாம்.

முக்கியக் குறிப்பு:

மாணவர்கள் தங்கள் விருப்பமான படிப்பிற்கான கடைசி தேதிகளை (Last Date) கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக ISI (புள்ளியியல்), CMC வேலூர் (பாராமெடிக்கல்) போன்ற நிறுவனங்களில் இடங்கள் மிகக் குறைவு என்பதால் முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

மேல் விவரங்களுக்கு அரசு உதவி மைய எண்ணான 14417-ஐ அழைக்கலாம் அல்லது 9443583519 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என்று அனுப்பி தகவல்களைப் பெறலாம்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்