இந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்!

இந்திய பொருளாதார வீழ்ச்சி – இப்போதுதான் தொடக்கம்!

இன்று உருவாகியுள்ள பெரு நெருக்கடி! சமாளிக்கச் சில திட்டங்கள்..மோடி – நிர்மலா அரசுப் பார்வைக்கு! -இந்தப் பிரச்சினைகளை விளக்கித் திட்டங்களை முன்வைப்பது இன்று இந்திய அளவில் முக்கியமான பொருளியல் வல்லுனர் பேரா. ஜயதி கோஷ் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.

நிகழ்ந்துள்ள இரண்டு விடயங்கள் நாம் என்ன நிலையில் உள்ளோம், எங்கு போய்க் கொண்டுள்ளோம் என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.

1. Global Leader – உலக முன்னோடி- ஆகப் போகுது நாடு என்றார்கள். எதில் என்பது இப்போதுதான் விளங்குகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உலகளவில் நம்பர் 1 நிலையை எட்டப்போவதில் உலக முன்னோடிதான் மோடியின் இந்தியா..

2. ஏப்ரல்- ஜூன் (2020) காலாண்டில் GDP வீழ்ச்சி 24%. வரலாறு காணாத வீஇழ்ச்சி, ஆனால் இதுவே குறைத்துச் சொல்லப்படும் மதிப்பீடு. உண்மை நிலை இன்னும் அதிகம்.

இந்த வீழ்ச்சிகள் நிர்மலா அம்மையார் சொல்வதுபோல கடவுள் கொடுத்தவை அல்ல. இந்தக் கையாலாகாதவர்கள் நம் மக்கள் மீது திணித்துள்ள கொடூரம். இவர்களின் தத்துபித்து நடவடிக்கைகள் பெரிய அளவில் நோய்த் தாக்குதல் பரவும் முன்னரே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இதில் அச்சத்துக்குரிய அம்சம் என்னவெனில் இந்தப் பொருளாதார வீழ்ச்சிதான் உச்சம் அல்ல. இதுதான் தொடக்கம். இன்னும் இருக்கிறது நாம் எதிர்கொள்ள!

இப்படியான பெரும் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? மோடி – நிர்மலா அரசின் கையாலாகாத்தனம் மட்டுமல்ல. இவர்களின் கஞ்சத்தனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் நிவாரண நடவடிக்கைகள் மிகக் குறைவு, மிக மோசம். விளவு. ஒருபக்கம் நுகர்வுக் (consumption) குறைவு (மக்களுக்குப் பொருட்களை வாங்கும் திறனில்லை). இன்னொரு பக்கம். முதலீடுகள் (investment) குறைந்துவிட்டன. Liquidity யை அதிகரிக்கும் முயற்சிகள் படு தோல்வி ! வங்கிகள் தமக்கு வேண்டிய நிறுவனங்கள் தவிர மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதில்லை. பேரழிவு நிர்வாகச் சட்டம் மத்திய அளவில் செயல்படுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி ஏதுமில்லை. நோய்க் கட்டுப்பாட்டில் திணறுகின்றன மாநிலங்கள். சட்டபூர்வமாக மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய GST பாக்கித் தொகையையும் கொடுக்காமல் இருக்கும் கொடூரம். இந்த ஆண்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. என்ன செய்யப் போகின்றன மாநில அரசுகள்?

இந்நிலையில் இருந்து மீள ஒரே வழி. மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி அளிப்புத் திட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும். வெறும் வாய்ச் சவடால்களாக இருக்காமல் பணம் கைமாற வேண்டும். உடன் GST கடன்களைத் தீர்க்க வேண்டும். பெருந்தொற்றுச் சமாளிப்புக்கு மட்டுமின்றி இன்றைய பெரும் பொருளியல் நெருக்கடியையும் ஓரளவு சமாளிக்கும் அளவில் அது இருக்க வேண்டும். பொது விநியோக அமைப்பை (PDS) எல்லோருக்கும் ஆக்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 10 கிலோ அரிசி ஒவ்வொரு குடும்பத்துக்கும் இன்னும் ஆறு மாதங்களுக்காவது கொடுக்க வேண்டும். அடுத்த 3 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 700 ரூ வங்கியில் இட வேண்டும். லாக் டவுனுக்கான இழப்பீடு இது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உள்ள வேலை நாட்களை ஆண்டுக்கு 200 என அதிகரிக்க வேண்டும்.

அதேபோல நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.. கடன் திருப்பித் தர வேண்டிய கால கெடுவை வட்டியில்லாமல் அதிகரிக்க வேண்டும். MSME க்கள் மற்றும் விவசாயிகளுக்கு புதிய கடன்கள் உடன் வழங்கப்பட வேண்டும். பெருந்தொற்று மற்றும் இதர நோய் நொடிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள இன்னும் அதிகமான உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் செலவாகும்தான். ஆனால் இதைச் செய்யாது போனால் அது மக்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் இன்னும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இப்போது செலவிடத் தயங்குவதைக் காட்டிலும் அந்த இழப்புகள் அதிகமாக இருக்கும். செலவுகளைக் குறைத்தாலும் சமாளிக்க இயலாத அளவிற்கு பெரும் நிதிப் பற்றாக்குறைச் சுமையை ஏற்படுத்தும்.

இவற்றை எப்படிச் சமாளிப்பது?

இப்போதைக்கு இதனால் ஏற்படும் செலவுச் சுமைக்கு மத்திய அரசி ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டும். உலகெங்கிலும் எல்லா நாடுகளும் இப்படித்தான் இப்போது சமாளித்துக் கொண்டுள்ளன. இப்படியான நடவடிக்கை அப்படி ஒன்றும் பணவீக்கத்திற்குக் காரணமாகி விடாது. ஏனெனில் இப்போதைக்கு demand குறைவு. அவசியப் பொருட்கள் தட்டுப்படாமல் கைவசம் இருத்தல் அவசியம்.

கூடவே சொத்து வரிகள், பன்னாட்டு கார்பொரேஷன்கள் மீதான வரிகள் ஆகியவற்றை சரியாகக் கையாளவேண்டும் இதை எல்லாம் எப்படிச் செயல்படுத்துவது என்பதை சிந்திக்க வேண்டும். டிஜிடல் முதலைகள் மீதெல்லாம் கவனம் குவிக்க வேண்டும்

துணிச்சலான சிந்தனை, உடனடிச் செயல்பாடு அதுவே இன்றைய உடனடித் தேவை.

செய்யுமா மத்திய அரசு?

(Jayati Gosh, The Hindu, Sep 03)- தழுவி மார்க்ஸ் அந்தோணிசாமியால் எழுதப்பட்டது.

error: Content is protected !!