ரயில்களை மறித்தால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.400 இழப்பீடு வசூல்!

இனி ஏதாவது பிரச்னையைக் காட்டி ரயில்களை மறித்தால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.400 இழப்பீடு கணக்கிட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது அமைப்பிடம் வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டிப்பதாகவோ எதிர்ப்பு தெரிவிப்பதாகவோ கூறிக்கொண்டு கடந்த 8,9 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு சில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனால் வங்கி சேவைகள் முடங்கின. தொழிற்சாலைகள் அதிகம் இருந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
கேரள மாநிலத்தில் பல இடங்களில் இடதுசாரி கட்சியினர் ரயில் மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட தலைவர்கள் உள்ளிட்ட தொண்டர்கள் மீது 32 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ரயில்நிலையங்களில் அத்து மீறி நுழைந்தது, பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிப்படையில்இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் எர்ணாகுளம் வடக்கு, கமலசேரி, திருபுன்னிதுறை ஆகிய இடங்களில் ரயில்களை மறித்ததாக 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டால் அல்லது தாமதம் ஆக்கப்பட்டால் ரயிலுக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.400 இழப்பு ஏற்படும். அதன் அடிப்படையில் இந்த இழப்பை ஏற்படுத்திய அரசியல் கட்சியினரிடம் இருந்து வசூலிக்கப்படும். கடந்த இரு நாட்களாக நடந்த பாரத் பந்த் போராட்டத்தின் போது ஏற்பட்டஇழப்புகளை சம்பந்தப் பட்டவர்களிடம் வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள்கூறினர்.