ரயில் பயணிகளுக்கு வீட்டுச் சாப்பாடு: புதுமைத் திட்டம் அறிமுகமாயிடுச்சு
ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டத்தை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளை மட்டுமே வாங்கி உண்ண வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பயணிகளை விடுவி க்கும் நோக்கில், அவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை இணைய வழியில் கேட்டு பெறும் வசதியை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. இந்த நிலையில், ரயில் பயணிகளுக்கு உள்ளூர்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வழங்குவது குறித்து ஆராயப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, கடந்த பிப்ரவரி மாதம், தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, ரயில் பயணிகளுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு வகைகளை அளிக்கும் புதுமையான திட்டம், மகாராஷ்டிர மாநிலம், கொங்கண் பகுதியில் உள்ள குதால் மற்றும் சாவந்த்வாடி ரயில் நிலையங்களில் செயல் படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து ஐஆர்சிடிசியின் நிர்வாக இயக்குநர் கூறியபோது, “சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தில் திறம்படப் பணியாற்றத் தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்களைப் பெற, நபார்டு வங்கியுடன் இணைந்து செயலாற்ற உள்ளோம்’ என்றார்.


