உலக அல்சீமர் நோய் தினம் -இன்று!

உலக அல்சீமர் நோய் தினம் -இன்று!

யோதிகம் பெரும்பாலான முதியவர்களை குழந்தைகளாக மாற்றிவிடுகிறது. வயது அதிகரிப்பதால் முதியவர்களுக்கு மூளையின் ஆற்றல் குறைகிறது. எழுபது வயதிற்கு மேல் மூளையின் புறணியானது சுருங்கத் தொடங்குவதால், முதியவர்கள் தங்களது ஞாபக சக்தியையும் சிந்திக்கும் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.இப்படி மூளையில் ஏற்படும் நோய்களில் ஒன்று ‘அல்சீமர்’. இதில் பாதிக்கப்பட்டவருக்கு 3 வகை தொந்தரவு இருக்கும். ஞாபகசக்தி, புரிந்து கொள்ளும் தன்மை, முடிவெடுக்கும் தன்மை போன்றவற்றில் குறைவு ஏற்படுவது இயல்பு.

அல்சீமர் எனப்படும் நினைவுத் திறன் குறைபாடு நோய்க்கு உலகம் முழுவதும் 18 முதல் 19 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்சீமர் நோய் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலோனோருக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செப்டம்பர் 21 ம் நாள் உலக அல்சீமர் தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 ல் ஒருவரும், 80 வயதை எட்டியவர்களில் 5ல் ஒருவரும் அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்களை விட பெண்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் ஏசியன் இன்ஸ்டிடிடுயூட் ஆப் மெடிகல் சயின்ஸ்சின் நரம்பியல் பிரிவு தலைவர் நஜீப் ரஹ்மான். 2010 ம் ஆண்டு நாடுமுழுவதும் நினைவுத் திறன் குறைபாடு நோய்க்கு 3.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இது 2030 ம் ஆண்டு இரட்டிப்பாகும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

அல்சீமரை தடுக்கலாம்

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும்,காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வைட்டமின் சி சத்து

இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தினசரி மூன்று கப் காபி குடிப்பவர்களுக்கு அல்சீமர் நோய் ஏற்படாது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயதானபின்னர் மறதிநோயினால் தாக்கப்பட்டவர்கள் குழந்தைகளைப் போல மாறிவிடுகின்றனர். அவர்களை ஒதுக்காமல் அன்பாய் அரவணைத்தாலே அவர்களின் நோய் பாதி குறைந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

அரக்கு தேய்த்து குளிங்க

வயதான காலத்தில் புதிய குழந்தைகளாய் அவதாரமெடுக்கும் முதியவர்களுக்கு வெர்டிகோ என்னும் தலைசுற்றலும் ஏற்படுகிறது. அவர்கள் அரக்கு என்னும் மூலிகையைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தலைச்சுற்றலை கட்டுப்படுத்தலாம். அரக்கு மரங்களின் கட்டை மற்றும் பூக்களில் உள்ள சப்போனின்கள் மூளையின் சமநிலையை நிலைநிறுத்தி காதின் உட்புறத்தில் ஏற்படும் நிலையின்மையை குணப்படுத்துகின்றன. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கொம்பரக்கை ஒரு துணியில் முடிந்து, நீரில் போட்டு கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் வடிகட்டி, அத்துடன் நல்லெண்ணெய் அரைபங்கு சேர்த்து கொதிக்கவைத்து, பதத்தில் வடிகட்டி, சூடுஆறிய பின் வாரம் இருமுறை தலையில் தேய்த்து இளவெந்நீரில் குளித்துவர வெர்டிகோ என்னும் தலை சுற்றல் நீங்கும். சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் அரக்குத் தைலத்தை வாங்கி, வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைமுழுகி வர முதுமையில் தோன்றும் தலைசுற்றல், சைனஸ் பிரச்னையால் தோன்றும் தலைசுற்றல் ஆகியன நீங்கும்.

error: Content is protected !!