திறம்பட செயல்படுவேன் – புதிய அமைச்சர் டி.பி. ஆர் ராஜா!
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை அடுத்துது செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா; எல்லாருக்கும் எல்லாம் என்கின்ற நோக்கத்துடன் தமிழ்நாட்டை தொடர்ந்து நம்பர் 1 மாநிலமாக அமைத்திட எல்லா விதத்திலும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர். டெல்டாவில் விவசாய தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு. அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை டெல்டாவில் எந்த பாதிப்பும் இல்லை. ஏற்கனவே பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் வழிகாட்டுதலில் எந்தவொரு பணியாக இருந்தாலும் திறம்பட செயல்படுவேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டளையை ஏற்று அவரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியின் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக அமைந்திட எல்லா விதத்திலும் என் பணியை திறம்பட செய்வேன் என்று கூறினார்.


