June 4, 2023

ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கும் தமிழகம் – ஒரு சுய பரிசோதனை… !

மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் தமிழ்நாடு…. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது… இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்… ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்…!

எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..

எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்…

பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன…

எங்கு பார்த்தாலும் “எந்த பிசினசும் சரியில்லைங்க” என்ற பேச்சுகள்…

இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை நண்பர் ஒருவர் அனுப்பியுள்ள செய்தி……

1. மது & போதை

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்… இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது…
தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது… என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்…
அவர்களுக்கு போட்டியாக…. பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்…

உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகார்ர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது… குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரத்திலோ செய்ய முடிவதில்லை..

குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை…

அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு 1000 கூலி கேட்கின்றனர்… வீட்டுக்கு 500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 500 என்று… இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,…
இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூகவிரோதிகளாகவும் உருவாகும். மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது…

2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்… மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.

3. நூறுநாள் வேலை..-இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை… ஆனால் ….
தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்
காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்..வேறு எந்த வேலையும் இல்லை.. 150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது…

4. இலவசங்கள்…- அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும், மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..

5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை…

இத்தகைய காரணங்களால். தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது… சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பளப் பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..

தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்…

ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது… ஒரு நாளைக்கு 850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட ஒரு வடநாட்டவர் 2 மணிநேரம் அதிகமாக 500-600 சம்பளத்திற்கு செய்கிறார்..

தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்…

இதுதான் அனைத்து வேலைகளுக்கும் நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை… கோவை திருப்பூரில் ஆயிரக்கணக்கான . பானிபூரி வண்டிகள் உள்ளன… அவற்றில் 10 % கூட வட இந்தியர்களுடையதல்ல.. 90% க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்…

கடைசியாக..

நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது… வேலையே செய்யக்கூடாது,
சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும்,
தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்… இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்….

கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ,

இன்னும்…

எல்லோரும்…?????

இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள..நோயை மாற்ற…

வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும்…😢

நிலவளம் ரெங்கராஜன்