இந்திய சினிமாவின் சுதந்திர சிந்தனைக்கு ஆப்பு!?

மோடி அரசின் புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இச்சட்டம் முறைக்கு வந்து விட்டால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் கூட அதன் அடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் இந்த புதிய வரைவு, சில மாற்றங்களை முன்மொழியும் வகையில் அமைந்ததிருக்கிறது. குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களை சான்றளிக்கும் சென்சார் வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மத்திய அரசு அதனை திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சென்சார் வழங்கப்பட்ட படங்களின் சான்றுகளை திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது கர்நாடக ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்புகள் மூலம் முந்தைய காலங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தப் புதிய சட்டம் நீதிமன்றங்களின் தீர்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு மத்திய அரசின் தலையீட்டிற்கு இடம் அளிக்கிறது. ஆனால் இப்படி ஒரு சட்டம் குறித்து எதையும் அறியாமல் அப்டேட் கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கின்றனர் நம் கோலிவுட்வாசிகள்.
அதே சமயம் நார்த் இண்டியா ஜாம்பவானகள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் ஆகியோருடன் வெற்றிமாறன் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
திருட்டுத்தனமாகவும், கள்ளத்தனமாகவும் திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்றும், இதனை தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.ஆனால், மத்தியில் இருக்கும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். நேர்மையற்ற இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தேச அளவில் திரைத்துறையினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில்தான், நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும், அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்
இது குறித்து கமல் அறிக்கை இதோ:
ஒரு சமூகத்தின் படைப்புச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது அமைதி காக்க முடியுமா? சினிமாவால் சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை. அப்படிப்பட்ட சினிமாக்களை உருவாக்கியும் இருக்கிறேன். தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக ஒரு படைப்பு வெளியாவதைத் தடுக்க என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நேரடியாக எதிர்கொண்டவன் நான். இப்போது படைப்புச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் தங்களுக்கேற்ப இன்னும் சுலபமாக வளைத்து ஒடித்துக்கொள்ள மத்திய அரசு முயல்கிறது. ‘ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021’ பற்றித்தான் குறிப்பிடுகிறேன். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும் முன் பொதுமக்களின் கருத்தைக் கேட்டிருக்கிறது அமைச்சகம்.
என்னுடைய முன்னோடியும் ஆசிரியருமான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சினிமா எனும் கலைச்சாதனத்தின் முழு ஆற்றலையும் அறிந்திருக்கவில்லை. தந்தை பெரியாரும் சினிமாவின் வலிமையை உணர்ந்திருக்கவில்லை. மக்களை மேம்படுத்தப் போராடிய இந்த நேர்மையாளர்கள் சினிமாவின் சக்தியை உணர்ந்திருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒரு கலைஞனாகவும் படைப்பாளியாகவும் சினிமாவின் வலிமையை முழுவதுமாக உணர்ந்திருக்கிறேன். என் ஆளுமையில் வளர்சிதை மாற்றங்களை உருவாக்கியதே சினிமாதான்.
சினிமா, இயக்குநரின் ஊடகம்தான். ஆனாலும்கூட அது மக்களைத்தான் பிரதிபலிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சினிமா, ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்கிறது. இந்தக் குரலைத்தான் ஒற்றைச் சட்டத்தின் மூலம் ஒழித்துவிடலாமென நினைக்கிறது மத்திய அரசு. பொதுமக்கள் பார்வைக்குத் தகுந்தது எனத் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியாகும் திரைப்படங்களை மறுபரிசீலித்து, தணிக்கை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இந்த மசோதா அளிக்கிறது. இது மிக ஆபத்தானது. ஆள்வோர்க்குக் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் வலிமையை உருவாக்கி அளிக்கிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவின் ஆபத்தான அம்சங்களைப் புரிந்துகொள்ள நாம் இப்போதிருக்கும் நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். தற்போதைய தணிக்கை விதிகளே அரதப் பழசானவை. பல விதிகள் தேவையற்றவை. காலத்துக்கேற்ப புதுப்பித்துக்கொள்ளாதவை. கலைஞர்கள் தங்களை சுயதணிக்கைக்குள் உட்படுத்திக்கொள்வதே சரியான நடைமுறையாக இருக்க முடியும். இப்போது அரசியலர்களும் அதிகாரிகளும் திரைப்படத் தணிக்கையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் பரிதாப நிலைமை மாற்றப்பட வேண்டும் என்பதே நெடும் காலமாக இங்கிருக்கும் கோரிக்கை. மத்திய அரசுக்கு இந்த அதிகாரத்தை அளிப்பது நிலைமையை இன்னமும் மோசமாக்கிவிடும்.
திரைப்படத் தணிக்கை திருத்த மேல்முறையீட்டு ஆணையத்தைக் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு இருந்த ஒரே வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கும் முயற்சியில் வென்றுவிட்டார்கள். இன்று இருக்கும் ஒரே வழி உயர் நீதிமன்றத்தை நாடுவதுதான். ஆனால், நீதிக்காகப் போராடும் வாய்ப்பும் வசதியும் பலருக்கும் வாய்ப்பதில்லை என்பது கூடுதல் சோகம். உச்ச நீதிமன்றத்தால் ‘அரசமைப்புக்கு முரணானது’ எனக் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை இந்த மசோதா மூலம் மத்திய அரசு கைப்பற்ற நினைக்கிறது. முதன்மைச் சட்டத்தின் பிரிவு 6 (1) அரசமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.சங்கரப்பா குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் அடிநாதமான ‘சட்டத்தின் ஆட்சி’ எனும் கருத்தாக்கத்துக்கு ஊறுவிளைவிக்கிறது இந்தச் சட்டப்பிரிவு.
ஒரு படைப்பின் மீது எழும் புகார்களின் மீது தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க மத்திய அரசு முயல்கிறது. தமிழக அரசு ஒரு கற்பனையான புகாரையும் இல்லாத சூழலையும் காரணம் காட்டி என் திரைப்படத்தை முடக்க முயன்றது. தணிக்கைச் சான்றிதழைப் பெற்ற பிறகும், என் சகோதரர்களுக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்டிய பிறகும் தமிழக அரசு இதைச் செய்தது. அரசியல் சூழ்ச்சிகளால் சொந்த மாநிலத்தின் திரையரங்கக் கதவுகள் எனக்கு மூடப்பட்டன. இதேபோல எந்த அரசாங்கமும் எந்தப் படைப்பையும் எப்படி வேண்டுமானாலும் முடக்கிப்போடும் அதிகாரத்தை இந்த மசோதா அளிக்கிறது.
திரைப்படத்தின் மீது பெறப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் ஆற்றலும் அதிகாரமும் அரசுக்கு இருக்கையில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று வெளியாகும் திரைப்படத்தைத் தடை செய்வது ஏற்புடையதல்ல என்று என் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் சமீபத்திய தடுமாற்றங்களை மத்திய அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டு அதன் அதிகாரங்களைக் கைப்பற்றத் துடிக்கிறது. இந்தப் புதிய மசோதா படைப்புச் சுதந்திரம், பேச்சுரிமை, விமர்சிக்கும் உரிமை ஆகியவற்றைத் தடைசெய்யும் அதிகாரத்தை இயல்பிலேயே கொண்டிருக்கிறது. அடிப்படைவாதிகள் அளிக்கும் அற்பமான புகார் மனுக்களைக் கொண்டு எந்தப் படைப்பையும் எளிதாகத் தடைசெய்துவிட முடியும்.
சாமானியர்களின் குரலும் வலுப்பெற்றுவரும் இணையப் புரட்சி யுகத்தில் வாழ்கிறோம். அரசோ மனிதர்களின் குரலை அடக்கப் பார்க்கிறது. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் குரல் ஒலித்துவிடக் கூடாது என நினைக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயக சக்திகள் இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தங்கள் குரலை வலுவாக வெளிப்படுத்த வேண்டும். இதைச் செய்வதில் ஊடகங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஏதேனும் தயக்கம் இருக்குமானால், இதை முன்னெடுத்துச் செல்லும் முன்னத்தி ஏராக ‘மக்கள் நீதி மய்யம்’ திகழும்.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைக் கேட்கிறது மத்திய அரசு. இதற்கென ஜூலை 2 வரை அவகாசம் குறித்திருக்கிறது. இது போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட நாம் அனுமதித்தால், அது எதிர்வரும் நம் சந்ததிகளையும் நிச்சயம் பாதிக்கும். இது வலதா இடதா என வாதிக்கக் கூடிய காலம் இல்லை. இது மய்யவாதத்தின் யுகம். இங்கு நடந்துகொண்டிருப்பது போர். ஆனால், ரத்தம் சிந்தாமலே போராடி வென்றாக வேண்டிய போர் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
‘ஓ… அடடா… மீண்டும் அந்த அகிம்சாவாதம் தலைதூக்கிவிட்டதே’ என சர்வாதிகாரிகள் கதறும் ஓசை கேட்கிறது. நான் அவர்களுக்கு உறுதியான குரலில் அமைதியாகச் சொல்கிறேன்: வன்முறை எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அகிம்சை மீண்டும் மீண்டும் தோன்றும். சர்வாதிகாரத்தை வெல்லும்! சம்பவாமி யுகே யுகே…
– கமல் ஹாசன், திரைக் கலைஞர், ‘மநீம’ கட்சியின் தலைவர்.