போலி ஆதார் தயாரிக்க முயன்ற 10 பேர் உ.பி.யில் அரெஸ்ட்!

அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவையாகி விட்ட ஆதார் தகவல்கள் ரகசியமானவை என்பதில் தற்போதைய செய்தியால் நம்பிக்கையின்மைதான் மேலும் மேலும் தொடருகிறது. முன்னரே. ஆதார் மூலம் தகவல்கள் திருடப்பட்டு விட்டன என்ற வழக்குகள் மூலம் அது ரகசியம் இல்லை என்பது வெளிப்பட்டுவிட்டது. இந்த ஆதார் எண் பதிவில் முறைகேடு செய்ததாக கடந்த மூன்று மாதங்களில் 10ஆயிரம் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(யு.ஐ.டி.ஏ.ஐ.) தெரிவித்து இருந்தது. ஆதார் முறையில் 5 சதவிகிதம் தவறு நடக்க வாய்ப்புள்ளது என ஆணையத்தின் தலைவர் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்ற விஷயத்தை எல்லாம் நம் மக்கள் கொஞ்சூண்டு மறந்து விட்ட நிலையில் ஆதார் மையத்தின் தொழில் நுட்பத்தில் ஊடுருவி போலி ஆதார் அட்டைகள் தயாரிக்க முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த ஆதார் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி சமூக விரோதிகள் சிலர் மோசடி செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாக புகார் ஒன்றை பதிவு செய்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் 10 பேர் ஆதார் இணையதளத்தில் ஊடுருவி அதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆதார் தயாரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சில ஊடுருவல்களை அடுத்து மர்ம நபர்கள் இதை முறைகேடாக பயன்படுத்த முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆதார் அளித்த புகாரின் பேரில் தற்போது அந்த முறைகேடு முறியடிக்கப்பட்டுள்ளது. ஆதார் வழங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யும் மையங்களை நடத்துவோர் முறைகேடுகளில் ஈடுபட முயன்றால் 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.
மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை பாயும். நாடு முழுவதும் ஆதார் விதிமுறைகளை மீறி செயல்பட முனைந்த 49 ஆயிரம் தனியார் நிறுவனங்கள் தடை செய்யப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2016 டிசம்பர் முதல் 6 ஆயிரத்திற்கும் அதிகமான விதிமுறைகள் சம்பவங்களில் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் 466 விதிமுறைகளை மீறிய மையங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்தனர்.