காசியில் ரூ.450 கோடியில் தயாராகும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திரிசூலம், உடுக்கை, நிலா வடிவங்கள்!

காசியில் ரூ.450 கோடியில்  தயாராகும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் திரிசூலம், உடுக்கை, நிலா வடிவங்கள்!

வாரணாசி ஆன்மிக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது இது மாநிலத்தின் முக்கியமான விளையாட்டு மையமாகவும் உருவாக உள்ளது. வரும் செப்.23 ம் தேதி வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் கட்டப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

இந்த மைதானம் குறித்து உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குநர் யுத்வீர் சிங் வரும் 2025 ஆண்டு முதல் காசி மக்கள் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் தீவிர பங்கேற்புடன் இந்த அடிக்கல் நாட்டு விழா தொடங்க உள்ளது. மேலும், நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி நேர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!