இந்து கோவில்களை இடிப்போம் என்று சொல்லவே இல்லை! – திருமாவளவன் விளக்கம்!

இந்து கோவில்களை இடிப்போம் என்று சொல்லவே இல்லை! – திருமாவளவன் விளக்கம்!

சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித் இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன் இந்து கோவில்களை இடிப்போம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. திருமாவளவன், தான் இந்துவா ? இல்லையா? என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன் னணி கேட்டுக்கொள்கிறது”என்று ராம. கோபாலன் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன், “எனது பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் நிறுத்தி விட்டு உள் நோக்கத்தோடு தவறான தலைப்பிட்டு செய்தியை அவதூறாக பரப்புகின்றனர்.ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டினார்கள் என்றும் அதனால் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்றும் சங்பரிவார் அமைப்பினர் கூறுகின்றனர். அப்படி என்றால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் பவுத்த விகார்களையும் சமண கோவில்களையும் இடித்து விட்டுத்தான் கட்டி இருக்கிறார்கள்.

ஒரு வாதத்திற்கு சொல்கிறேன். சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள் இருக்கும் இடமெல்லாம் பவுத்த விகார்கள் தான் கட்ட வேண்டும் என்று தான் அக்கூட்டத்தில் நான் பேசினேன். இந்து கோவில்களை இடிப்போம் என்ற சொல்லாடலை நான் பயன்படுத்தவில்லை.ஒரு வாதத்திற்காக நான் சொல்கிறேன் என்கிற வாக்கியத்தை வெட்டி விட்டு நான் சொல்லாத ஒரு வாக்கியத்தை செய்தி ஆக்கியிருக்கிறார்கள். என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு திட்டமிட்டு எனக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதை சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்”என தெரிவித்து உள்ளார்.

Related Posts

error: Content is protected !!