இலவச யுனிகோட் எழுத்துருக்களைப் புறக்கணித்து தனியார் எழுத்துருக்களைப் பயன்படுத்தும் தலைமைச் செயலகம்!
உலகம் முழுவதும் தமிழ் மொழி பல்வேறு வகையிலும் சிறப்புப் பெற்று வரும் நிலையில், ஆறாம் திணையாகக் கருதப்படும் இணையத்திலும் தமிழ் மொழியை கோலோச்ச வைக்கும் முயற்சிகள் பல்வேறு வகையிலும் ஆங்காங்கு உள்ள தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆங்கிலத்தால் முடிந்த எதுவும் தமிழாலும் முடியும் எனும் நிலைக்கு தமிழை உலகத் தமிழர்கள் வழி நடத்திச் செல்கிறார்கள். இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற இலவச யுனிகோடு எழுத்துருக்களை புறக்கணித்துவிட்டு, அரசின் உத்தரவுகளை மீறி, பணம் கொடுத்து வாங்கப்படும் தனியார் எழுத்துருக்களை அனைத்து அரசுத்துறைகளும் பயன்படுத்தி வரும் போக்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து கணினிகள், ஸ்மார்ட் கைபேசிகள், கையடக்க கணினிகள் என அனைத்திலும் தமிழ் யுனி கோடு எழுத்துருக்கள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இந்த எழுத்து ருக்களைக் கொண்டு, தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் கூட, ஃபொனடிக் விசைப் பலகையைக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்து, குறுஞ்செய்தியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். ஸ்மார்ட் கைபேசி மற்றும் கையடக்க கணினிகளில், தனியார் எழுத்துருக்களை நிறுவ முடியாது. மேலும் உலகெங்கிலும் தனியார் தமிழ் எழுத்துருக்களை விட தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த யுனிகோடு எழுத்துருக்கள், இணையத் தமிழ் வளர்ச் சிக்கு இன்றியமையாததாக உள் ளது.
இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில், தமிழ் யுனிகோடு விசைப்பலகை செயலி மற்றும் பாரதி, கபிலர், கம்பர், வள்ளுவர், காவேரி ஆகிய 5 வகையான யுனிகோடு எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை விண்டோஸ், மேக்கின்டோஷ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களில் இயங்கக் கூடியது. அவற்றை, அரசால் நியமிக்கப்பட்ட, அப்போது தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநராக இருந்த பி.ஆர்.நக்கீரன் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்து, அதை அரசுத் துறைகளும், பொதுமக்களும் பயன்படுத்தலாம் என, அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதை அரசு ஏற்றுக்கொண்டு கடந்த மார்ச் 2013-ல் ஆணை பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 2013-ல் வெளியிடப்பட்ட அரசாரணையில் “அரசுத் துறைகள், தலைமைச்செயலகம் ஆகியவற்றில், அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட தனியார் எழுத்து ருக்களைப் பயன்படுத்தவதாக அரசு கவனத்துக்கு வந்துள்ளது. அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கியுள்ள தமிழ் யுனிகோடு விசைப்பல கை செயலி மற்றும் தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள், http://tamilvu.org/tkbd/index.htm என்ற இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கிறது. அதனால் விலை கொடுத்து வாங்கப்படும் தனியார் எழுத்துருக்களுக்கு பதிலாக, இலவசமாக கிடைக்கும் யுனிகோடு எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து, நிறுவி பயன்படுத்தலாம்” என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பெரும்பாலான அரசு அலுவலகங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இது தொடர்பாக பல அரசுத் துறைகளில் கேட்டபோது, ‘‘பல் வேறு விவரங்க ளை தனியார் எழுத்துருவில் வழங்குமாறு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை கேட்கிறது. தலைமைச் செயலகத்திலிருந்து எந்த தகவலைக் கேட்டாலும், தனியார் எழுத்துருவில்தான் கேட்கிறார்கள். அதனால் நாங்கள் தனியார் எழுத்துருவையே பயன்படுத்த வேண்டி யுள்ளது’’ என்றனர்.நிலைமை இவ்வாறு இருப்பதால், தற்போது பெரும்பான்மையான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் யுனிகோடு எழுத்துரு மூலம், அரசின் அறிவிப்புகள், உத்தரவுகளை இணையதளத்தில் தேட முடிவதில்லை. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் கேட்டபோது, ‘‘அனைத்து அரசுத் துறைகளும் யுனிகோடு எழுத்துருவை பயன்படுத்துமாறு மீண்டும் அறிவுறுத்தப்படும்’’ என்று சொல்கிறார்கள்!


